திருப்புகழ் பாடல் 35 – Thiruppugazh Song 35 – உருக்கம் பேசிய நீலியர்: Urukkam Pesiya Neeliyar

திருப்புகழ் பாடல் 35 – திருச்செந்தூர்

தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன …… தனதான

உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் …… மதியாதே

உரைக்கும் வீரிகள் கோளர வாமென
வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் …… புரிவேனோ

அருக்கன் போலொளி வீசிய மாமுடி
யணைத்துந் தானழ காய்நல மேதர
அருட்கண் பார்வையி னாலடி யார்தமை …… மகிழ்வோடே

அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட …… னினிதாள்வாய்

இருக்குங் காரண மீறிய வேதமும்
இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ …… முடன்மேவி

இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
கிறுக்குந் தாதகி சூடிய வேணிய …… னருள்பாலா

திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
துதிக்குந் தாளுடைய நாயக னாகிய
செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் …… மருகோனே

செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் …… பெருமாளே.