திருப்புகழ் முதல் பாடல் – Thiruppugazh Song 1 – Kaithala Niraikani – Vinayakar Thuthi

பாடல் 1 – விநாயகர் துதி
ராகம் – நாட்டை, தாளம் – ஆதி

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன …… தனதான

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் …… அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை …… கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய …… முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த …… அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை …… இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் …… பெருமாளே.