Pathinondram Thirumurai – திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

கபிலதேவ நாயனார் – மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

பாடல்  1

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை .

குறிப்புரை :

மூத்த நாயனார் – மூத்த பிள்ளையார் (ஆனை முகத்தான்). திரு ஆக்கும்; செஞ்சொற் பெருவாக்கும், பீடும் பெருக்கும்; உரு ஆக்கும்; ஆதலால் அவனைக் காதலால், வானோரும் தம் கை கூப்புவர் – எனக் கூட்டுக.
திரு – செல்வம். செய் கருமம் – செய்யத் தொடங்கும் செயல், கை கூட்டும் – இடையூறின்றி இனிது முடியச் செய்வான். செஞ்சொல் பெருவாக்கு – குற்றமற்ற சொற்களை வழங்கும் உயர்ந்த சொல் வன்மை. பீடு – பெருமை; புகழ். உரு – அழகு. “வானோரும்“ என்னும் உம்மை உயர்வு சிறப்பு. அதனால் ஏனையோர் கைகூப்புதல் தானே அமைந்தது. “கை கூப்புவர்“ என்பது `தொழுவார்` என்னும் பொருளது ஆதலின், அஃது “ஆனை முகத்தானை“ என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
`செய் கருமம் கை கூட்டும்; ஆதலால் கைகூப்புவர்` என்று, `பிள்ளையாரைத் தொழாதபொழுது செய் கருமம் கை கூடுதல் அரிது` என்னும் குறிப்பினது.
இத்திருப்பாடலையே பற்றிப் பிற்காலத்தில் ஔவையார்,
வாக்குண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மாமலராள்
நோக்குண்டாம்; மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு*
என அருளிச் செய்தமை அறியத் தக்கது.