Thiruppugazh Song 200 – திருப்புகழ் பாடல் 200

திருப்புகழ் பாடல் 200 – பழநி
ராகம் – வராளி; தாளம் – மிஸ்ர சாபு (3 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2

தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன …… தனதான

வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணி லுஞ்சில பாத கஞ்செய …… அவமேதான்

வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதி ரிந்துள
மேக வன்றறி வேக லங்கிட …… வெகுதூரம்

போய லைந்துழ லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ
பூத லந்தனி லேம யங்கிய …… மதிபோகப்

போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட …… அருள்வாயே

தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன் …… மருகோனே

தேச மெங்கணு மேபு ரந்திடு
சூர்ம டிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதி யாள அன்புசெய் …… திடுவோனே

ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி யம்பிகை வேத தந்திரி …… யிடமாகும்

ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய …… பெருமாளே.