How to observe Kandhan Vratham

கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.

அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில் நதிநீராடி திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும்.

தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம், கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை, கார்த்திகை தீபவிழா எனப்படும். முருகன் தலங்கள் தோறும் கார்த்திகை சிறப்புடன் நடைபெறும் என்றாலும் கார்த்திகை தீபச்சிறப்புடையது “அக்னி தலமான” திருவண்ணாமலை தான்.

கார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். வேறு சிலரும் இவ்விரதம் மேற்கண்டு நற்கதி அடைந்தார்கள். காஞ்சி சிதம்பர முனிவர் என்பவர் அருளிய சேத்திர கோவை பிள்ளை தமிழில் 100 முருகன் தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு தலம் கார்த்திகேயன் பெயரில் கார்த்திகை மலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகாலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது. இது “ஏழு நட்சத்திரங்களின்” கூட்டமாகும்.

கிருத்திகா நட்சத்திரத்தில் அக்னியை சூதானம் பண்ண வேண்டும். அது அக்னியின் நட்சத்திரம் என்றும், அதுவே நட்சத்திரங்களுக்குள் முகம் போன்றது என்றும் வேதம் கூறுகிறது. அதற்கு காரணமும் காட்டுகிறது. மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும். ஆனால் கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால், அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்பது கருத்து. இவ்வளவு பெருமை வாய்ந்தது “கிருத்திகா” நட்சத்திரம் என்றாலும் இதற்கு முதன்மை தரப்பட்டதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது.

இந்த கிருத்திகைகள் கிழக்கு திசையிலிருந்து விலகிச் செல்வதில்லை. மற்றவைகளோ கிழக்கிலிருந்து விலகிச் செல்கின்றன. எனவே வேதகாலத்தில் கால நிர்ணயம் செய்வதற்குக் கிருத்திகை மூலகாரணமாக உள்ளது.