Kandha Guru Kavasam – கந்த குரு கவசம்

வேண்டுதல்களை நிறைவேற்றும் கந்த குரு கவசம்

  • கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
  • முஷிக வாகனனே மூலப் பொருளோனே
  • ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
  • திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
  • சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் …… (5)
  • சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
  • கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
  • அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.
  • செய்யுள்
  • ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
  • சரவணபவ குகா சரணம் சரணம் …… (10)
  • குருகுகா சரணம் குருபரா சரணம்
  • சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
  • தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
  • ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
  • தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் …… (15)
  • அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
  • அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
  • அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
  • தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
  • ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ …… (20)
  • காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
  • போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
  • போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
  • போற்றி போற்றி முருகா போற்றி
  • அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் …… (25)
  • தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
  • ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
  • சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
  • அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
  • திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே …… (30)
  • ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
  • அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
  • அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
  • வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
  • வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே …… (35)
  • தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
  • திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
  • பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
  • திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
  • செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் …… (40)
  • அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
  • அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
  • திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
  • திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
  • எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை …… (45)
  • பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
  • எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
  • எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
  • என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
  • திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா …… (50)
  • அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
  • திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
  • ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
  • செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
  • சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் …… (55)
  • குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
  • குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
  • பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
  • பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
  • விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா …… (60)
  • வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
  • வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
  • கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
  • காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
  • மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் …… (65)
  • கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
  • குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
  • வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
  • வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
  • ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் …… (70)
  • ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
  • அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
  • அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
  • பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
  • பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் …… (75)
  • அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
  • படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
  • உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
  • உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
  • அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் …… (80)
  • அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
  • அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
  • சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
  • வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
  • யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …… (85)
  • யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
  • உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
  • சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
  • அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
  • நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் …… (90)
  • பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
  • உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
  • யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ
  • முக்திக்கு வித்தான முருகா கந்தா
  • சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா …… (95)
  • ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
  • ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
  • தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
  • சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
  • பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ …… (100)
  • ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
  • அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
  • உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
  • தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
  • வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா …… (105)
  • காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
  • வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
  • மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
  • அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
  • அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் …… (110)
  • உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
  • அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
  • வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
  • உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
  • அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா …… (115)
  • அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
  • சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
  • சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
  • அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
  • அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு …… (120)
  • அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
  • ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
  • தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
  • நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
  • பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் …… (125)
  • அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
  • அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
  • சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
  • சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
  • சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் …… (130)
  • சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
  • சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
  • ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
  • தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
  • திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் …… (135)
  • சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
  • கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
  • தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
  • தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
  • தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் …… (140)
  • மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
  • வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
  • வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
  • வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
  • பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் …… (145)
  • என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
  • நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
  • புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
  • கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
  • நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் …… (150)
  • செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
  • கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
  • உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
  • நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
  • பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் …… (155)
  • கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்
  • தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
  • கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
  • மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
  • மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் …… (160)
  • ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
  • உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
  • நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
  • இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
  • புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே …… (165)
  • உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
  • தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
  • அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
  • என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
  • முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் …… (170)
  • பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
  • ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
  • க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
  • ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
  • ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி …… (175)
  • ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
  • முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
  • மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
  • முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
  • முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா …… (180)
  • ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
  • இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
  • முலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
  • காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
  • சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் …… (185)
  • தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
  • ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
  • முலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
  • அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
  • எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் …… (190)
  • முவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
  • பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
  • கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
  • கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
  • ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே …… (195)
  • வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
  • வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
  • சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
  • அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
  • அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் …… (200)
  • சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
  • நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
  • மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
  • வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
  • பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா …… (205)
  • பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
  • பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ
  • பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
  • பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
  • திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் …… (210)
  • பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
  • ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
  • குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
  • கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
  • ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே …… (215)
  • பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
  • பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
  • தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
  • எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
  • ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் …… (220)
  • சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
  • சரவண பவனே சரவண பவனே
  • உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
  • உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
  • என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் …… (225)
  • சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
  • இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
  • இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
  • மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
  • ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே …… (230)
  • சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
  • காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
  • சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
  • நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
  • திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே …… (235)
  • திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
  • திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
  • நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
  • நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
  • அத்வைத ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் …… (240)
  • ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
  • ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
  • மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
  • வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
  • தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் …… (245)
  • துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
  • பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
  • இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
  • ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
  • அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா …… (250)
  • மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
  • கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
  • ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
  • இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
  • என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே …… (255)
  • அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
  • வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
  • அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
  • சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
  • ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ …… (260)
  • ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய்
  • அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
  • அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
  • அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
  • அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் …… (265)
  • உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
  • உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
  • எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
  • அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
  • அன்பே சிவமும் அன்பே சக்தியும் …… (270)
  • அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
  • அன்பே தேவரும் அன்பே மனிதரும்
  • அன்பே நீயும் அன்பே நானும்
  • அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
  • அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் …… (275)
  • அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
  • அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
  • அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
  • எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
  • அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் …… (280)
  • ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
  • முவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
  • ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
  • ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
  • இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு …… (285)
  • எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
  • முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
  • நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
  • உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
  • நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் …… (290)
  • விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
  • நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
  • ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
  • சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
  • சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா …… (295)
  • ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
  • மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
  • கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
  • கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
  • கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா …… (300)
  • கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
  • மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
  • சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
  • சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
  • பழனியில் போகருமே பாரோர் வாழப் பிரதிஷ்டித்தான் …… (305)
  • புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
  • கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
  • கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
  • கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
  • உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் …… (310)
  • ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
  • நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
  • பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
  • கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
  • சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் …… (315)
  • கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
  • ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
  • அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமுல மானகுரோ
  • அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
  • சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே …… (320)
  • பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
  • பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
  • மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
  • சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
  • ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா …… (325)
  • சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
  • பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
  • திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
  • குமரா முருகா குருகுகா வேலவனே
  • அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை …… (330)
  • கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
  • ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
  • ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
  • போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
  • தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா …… (335)
  • ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
  • தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
  • ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
  • கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
  • ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் …… (340)
  • உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
  • கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
  • கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
  • புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
  • திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக …… (345)
  • புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
  • நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
  • நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
  • முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
  • உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் …… (350)
  • அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
  • முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
  • அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
  • அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
  • ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் …… (355)
  • முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
  • ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
  • சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
  • சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
  • வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ …… (360)
  • சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
  • சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
  • சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
  • சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
  • ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு …… (365)
  • சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
  • சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
  • அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
  • திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
  • ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ …… (370)
  • பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
  • பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
  • இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்
  • முவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
  • அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா …… (375)
  • சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
  • கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
  • பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
  • கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
  • கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் …… (380)
  • கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
  • சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
  • ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
  • அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
  • ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் …… (385)
  • வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
  • பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
  • சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
  • ஸ்கந்தகுரு கவசமிதை கருத்து நிறுத்தி ஏற்றுவீரேல்
  • கர்வம் காமம் குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் …… (390)
  • முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
  • அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
  • ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
  • கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
  • சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் …… (395)
  • பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
  • கந்தகுரு கவசமிதை ஒரு மண்டலம் நிஷ்டையுடன்
  • பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
  • திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
  • காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் …… (400)
  • ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
  • கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
  • உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
  • இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
  • துன்பம் அகன்று விடும் தொந்தரவுகள் நீங்கிவிடும் …… (405)
  • இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
  • பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
  • காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
  • கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
  • இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் …… (410)
  • தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
  • போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
  • ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
  • அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
  • ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் …… (415)
  • உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
  • தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
  • எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
  • ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
  • தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே …… (420)
  • கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
  • கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
  • கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
  • பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
  • ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் …… (425)
  • ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
  • இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
  • முன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
  • நான்குமுறை தினம் ஓதி நல்லவரம் பெறுவீர்
  • ஐந்துமுறை தினம் ஓதி பஞ்சாட்சரம் பெற்று …… (430)
  • ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
  • ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
  • எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்தியும் கிட்டும்
  • ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
  • பத்துதரம் ஓதி நித்தம் பற்றற்று வாழ்வீரே …… (435)
  • கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
  • கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
  • முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
  • நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
  • கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் …… (440)
  • கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
  • உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
  • சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
  • கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
  • கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் …… (445)
  • கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
  • பாராயணம் செய்து உலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். …… (447)