Mahabharatham story in Tamil 101– மகாபாரதம் கதை பகுதி 101

மகாபாரதம் பகுதி-101

பின்னர், அர்ஜுனனிடம், பார்த்தா! இதுதான் சரியான சமயம். சூரியன் மறைய இன்னும் சிறிது நேரமே இருக்கிறது. உம்… கர்ணன் மீது அம்பை விடு, என்றார். அவன் தனது சகோதரன் என்பதை அதுவரை அறியாத அர்ஜுனனும், தன் எதிரி வீழப்போகிறான் என்ற மகிழ்ச்சியுடன் அஞ்சரீகம் என்ற அம்பை எய்தான். அது அர்ஜுனனின் மார்பில் பாய்ந்தது. தனக்கு துன்பம் செய்தவர்களுக்கு முனிவர் ஒருவர் விடும் சாபம் எப்படி உடனே பலிக்குமோ, அதுபோல் கர்ணன் மீது அர்ஜுனன் விட்ட அம்பும் உயிரையே எடுக்கும் விதத்தில் பாய்ந்தது. அவன் குற்றுயிராகக் கிடந்தான். அப்போது, அவனது கண்களில் தான் கண்ட நாராயணனின் விஸ்வரூபக்காட்சி நிழலாடியது. அது தெரிந்தவுடனேயே நாராயணா, கோவிந்தா, பத்மநாபா, புண்டரீகாக்ஷா, கேசவா, மாதவா, ஸ்ரீஹரி என்பது உள்ளிட்ட நாமங்களை அவனது நாக்கு ஜபித்தது. மரண நேரத்தில் உயிர் துடிக்கும். உடல் என்னவோ போல் ஆகும், பயம் வாட்டி வதைக்கும். அத்தகைய நிலையில் இருந்து தப்ப வேண்டுமானால், ஸ்ரீமன் நாராயணனை மனதில் நினைத்து அவன் நாமங்களை மானசீகமாகச் சொல்ல வேண்டும். அப்படி சொல்பவர்களுக்கு வைகுண்ட பதவி நிச்சயம். கர்ணனும் அத்தகைய பிறப்பற்ற நிலைக்காகவே இவ்வாறு செய்தான். அவனிடம் இல்லாத பணமா? அவன் செய்யாத தர்மமா? சூரியனுக்கே பிள்ளையாகப் பிறந்ததால் எதையும் செய்யும் வல்லமையுள்ளவன், அவன் துரியோதனனை விட்டுப் பிரிந்திருந்தால் அவனுக்கு இப்போது இந்த உலகமே அடிமையாயிருக்கும்… அப்படி பட்ட சவுகரியங்களுக்கு சொந்தக்காரனும், மரணநேரத்தில் தவிக்கும் தவிப்பை பார்த்தீர்களா? கடைசியில் அவனுக்கு கை கொடுத்தது எது? நாராயணனின் திருநாமம் தான். கர்ணனின் மரணம், நம் ஒவ்வொருவருக்கும் பாடம். வாழும் காலத்திலேயே உங்களுக்கு பிடித்த இறை நாமங்களை தினமும் சொல்லுங்கள். மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றினாலும் பரவாயில்லை. அதைச் சொல்லுங்கள். காலப்போக்கில், உங்களுக்குள் மாற்றம் நிகழ்வதை உணர்வீர்கள். குந்திதேவிக்கு அசரீரியின் மூலம் கர்ணனின் இறுதிக்காலம் பற்றிய அறிவிப்பு கிடைத்தது. அவள் களத்துக்கு ஓடோடி வந்தாள்.

தன் மகனை எடுத்து மடியில் வைத்தாள். மகனே! நீயே என் மூத்தமகன். உனக்கு பாண்டவர்களாகிய ஐந்து தம்பிமார்களும், துரியோதனன் உள்ளிட்ட நுõறு தம்பிமார்களும் உண்டு. இந்தப் போர் வராமல், நான் உண்மையைச் சொல்லியிருந்தாலோ அல்லது தேவர்கள் சதிசெய்யாமல் இருந்திருந்தாலோ நீயே இந்த உலகத்தின் தலைவனாக இருந் திருப்பாய். மழை தரும் மேகமே வெட்கப்படும் அளவுக்கு தர்மம் செய்தவனே! விதிவசத்தால் நீ மறையப் போகிறாய். என்னால் துக்கத்தை தாங்க முடியவில்லையே, எனக் கதறினாள். அவளது கூந்தல் அவிழ்ந்து கிடந்தது.
அப்போது, அவளது தனங்களில் பால் சுரந்தது. அதைக் கர்ணனுக்குப் புகட்டினாள். இறப்பின் போது, மனிதர்களுக்கு பசும்பால் கொடுப்பது இன்றைக்கும் சம்பிரதாயம். இறப்பிற்கு பிறகு கூட சமாதியிலோ, சிதையிலோ அதை ஊற்றுகிறோம். அதனால் தான் கோமாதா என்று பசுவைத் தாயாகக் கருதி அழைக்கிறோம். ஆனால், இந்த உலகத்திலேயே தாய்ப்பால் குடித்து மரணத்தைச் சந்தித்த ஒரே ஜீவன் கர்ணன் மட்டுமே! எல்லாம் தர்மத்துக்கு கிடைத்த பலன்! அவனை போல் இல்லாவிட்டாலும், சராசரி தர்மவானாகவாவது இருக்கவேண்டும் என்பதே மகாபாரதம் இவ்விடத்தில் நமக்கு உணர்த்தும் கருத்து. தாய்ப்பால் குடித்த கர்ணனின் உயிர் ஒரு ஒளிப்பிழம்பாக மாறி, அவனது தந்தை சூரியனைச் சேர்ந்தது. அவனது இழப்பைத் தாங்க முடியாத சூரியன் மேற்குக் கடலில் மறைந்து விட்டான். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வைகுண்டப்பதவிக்காகச் சென்றது. அவனை வரவேற்கும் வகையில் தேவர்கள் ஆரவாரம் செய்தனர். துந்துபி என்னும் இசைக்கருவி முழங்கியது. துரியோதனன் கலங்கிப் போய்விட்டான்.

கர்ணா! என் அன்பு நண்பனே! உன்னை இழந்த பிறகு இந்த ராஜ்யம் எதற்கு? இந்தப் போர் எதற்கு? யாருடைய துணையுடன் இந்த ராஜ்யத்தை நான் ஆள்வேன்? நீயும் போய்விட்டாய். 99 தம்பிமார்களும் போய்விட்டார்கள். பீமனுடன் போர் செய்ய வேண்டியது மட்டும் இல்லாவிட்டால், இப்போதே உன்னோடு வந்திருப்பேன். பீமனை ஒழித்து விட்டு இதோ நானும் வந்து விடுகிறேன், என்று கதறினான். கர்ணனை தங்கள் தாய் மடியில் கிடத்தி அழும் காரணத்தைத் தெரிந்து கொண்ட பாண்டவர்கள் நடுங்கி விட்டார்கள். சொந்த சகோதரனையே கொன்ற பாவிகளாகி விட்டோமே என்று கதறினார்கள். அண்ணனைக் கொன்று கிடைக்கும் இந்தப்பதவி தேவை தானா என்று கண்ணீர் வடித்தார்கள். சகோதர ஒற்றுமை குறைந்து விட்ட இக்காலத்தில், இந்தக் கட்டத்தை கவனமாகப் படிக்க வேண்டும். ஒருவர் இருக்கும்போது அவரது அருமை தெரியாது. ஒரு கஷ்டம் வந்த பிறகு தான், ஐயோ, அண்ணனைப் பிரிந்தோமே, தம்பியைப் பிரிந்தோமோ என்று மனம் வலிக்கும். மகாபாரதம் சகோதர ஒற்றுமையை வலியுறுத்துகிறது. வீட்டுக்குள் மட்டுமல்ல, நாட்டிலும், உலகத்திலும் கூட இந்த ஒற்றுமை வேண்டும். ஒருவரை ஒருவர் சகோதரராக மதித்தால், உலகத்தில் கஷ்டமேது? அம்மாவிடம் சென்ற பாண்டவர்கள், தங்களிடம் கர்ணனைப் பற்றிய உண்மையை மறைத்ததற்காக வருந்தினார்கள்.உலகத்தில் பெற்ற தாயே பிள்ளைகளுக்கு தெரியாமல் தவறு செய்தது இதுவே முதல் முறை. இப்படி ஒரு கொடுமையை எங்கும் நாங்கள் பார்த்ததில்லை, என்று பெற்றவளிடம் முதன்முறையாக சற்று கடுமையாகவே பேசினார்கள்.

பீமன் கர்ணனின் முகத்தைப் பார்த்து, அண்ணா! நாங்கள் ஐவரும் உமக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால், எங்களைத் தவிக்கவிட்டு எமலோகம் சென்றீரே! என வருந்தினான். அர்ஜுனன், என் கண்ணையே நான் குத்திக்கொண்டேனே! நான் எய்த அம்பு எனக்கே தீமை செய்கிறது என்று எண்ணிக்கூட பார்க்கவில்லையே, என்றான்.அர்ஜுனனின் இந்தப்புலம்பலில் ஒரு தத்துவம் புதைந்து கிடக்கிறது. அது என்ன?