Mahabharatham story in Tamil 32 – மகாபாரதம் கதை பகுதி 32

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி-32

இந்திரசேனையின் முன்னால் சிவபெருமான் தோன்றினார்.மகளே! நீண்ட காலமாக தவமிருக்கும் உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். அவள் சிவனிடம், சுவாமி! எனக்கு நல்ல கணவரைத் தரவேண்டும், என ஐந்து முறை கேட்டாள். சிவபெருமானும் அப்படியே அருள்பாலித்தார். நீ ஐந்து முறை என்னிடம் கணவன் வேண்டும் என கேட்டதால் ஐந்து சிறந்த கணவர்கள் உனக்கு கிடைப்பார்கள், என்றார். இந்திரசேனை பதறிவிட்டாள். நான் தங்களிடம் ஐந்து முறை கேட்டதன் காரணம் மிகச்சிறந்த கணவர் அமைய வேண்டும் என்பதால்தான். தாங்கள் சொன்னதுபோல் ஐந்து கணவர்களை கேட்கவில்லை, என்றாள்.

நான் காரண காரியத்துடன்தான் எதையும் செய்வேன். உன்னை அவ்வாறு சொல்ல வைத்ததும் நான்தான். உலக நலன் கருதி நீ ஐந்து பேருக்கு மனைவியாக வேண்டி உள்ளது. அவர்கள் ஒற்றுமையுடன் இருந்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட இந்த அரிய தியாகத்தை செய்ய வேண்டி உள்ளது. ஒரு நல்ல செயலுக்காக விதிகளை மீற வேண்டி உள்ளது. எனவே எனது கட்டளைப்படி நீ நடக்க வேண்டும், என்று சொல்லி மறைந்தார்.

இந்திரசேனை மிகுந்த வருத்தமடைந்தாள். கங்கைக்கு சென்று நீராடி தான் ஏதேனும் பாவம் செய்திருந்தால் அது நீங்க வேண்டும் என கங்காதேவியை பிரார்த்தித்துக்கொண்டாள். ஆற்றில் குளிக்கும்போதே அவள் கண்களிலிருந்து அருவியாய் கண்ணீர் கொட்டியது. அந்த கண்ணீர்த்துளிகள் தங்கத் தாமரைகளாக மாறின. அப்போது தேவலோகத்திலிருந்து இந்திரன் அங்கு வந்தான். அவன் இந்த அதிசயக் காட்சியைக் கண்டான். குளித்துவிட்டு கரையேறிய இந்திரசேனையை பின் தொடர்ந்தான். அப்போது சிவபெருமான் எதிரே வந்தார். அவரைக்கூட கவனிக்காமல் அந்த அதிசயப் பெண்ணைப் பற்றி சிந்தித்தபடியே இந்திரன் நடந்து கொண்டிருந்தான்.

இதனால் கோபமடைந்த சிவபெருமான், இந்திரனை சிறையிலடைத்தார். அங்கே ஏற்கனவே நான்குபேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே இந்திரலோக அரசர்களாக இருந்தவர்கள். சிவபெருமான் இந்திரசேனையிடம், நான் குறிப்பிட்ட ஐந்து கணவர்களும் இவர்கள்தான். அடுத்த பிறவியில் இந்திரர்களாக இருந்த இவர்கள் ஐந்து பேரும் உன்னை மனைவியாக அடைவார்கள், என்றார். இந்திரசேனையின் ஆயுட்காலம் முடிந்தது. அவள் துருபதனான உனது மகளாக பிறந்தாள்.

நீ பாஞ்சால தேசத்தை ஆள்வதால் மக்கள் அவளை பாஞ்சாலி என அழைத்தனர். நீ திரவுபதி என செல்லப் பெயரிட்டு அவளை அழைத்து வருகிறாய். இப்போது இந்த ஐந்துபேருக்குமே சிவபெருமானின் கட்டளைப்படி உலக நன்மை கருதி நீ அவளை மணம் முடித்து வைக்க வேண்டும், என்றார் வியாசர்.வியாசரின் வார்த்தைகளைக் கேட்ட துருபதன் உலக நலனுக்காக தன் மகளை பஞ்சபாண்டவர்களுக்கு திருமணம் செய்துகொடுக்க சம்மதம் தெரிவித்தான். அழகிய திருமண மண்டபம் அமைக்கப்பட்டது.

அங்கே ஐந்து பேருக்கும் அவளை தனித்தனியாக திருமணம் செய்து கொடுத்தனர். தன் மருமகன்களுக்கு ஏராளமான படைபலத்தையும், நாடுகளையும், செல்வத்தை யும் அள்ளிக்கொடுத்தான். இந்தச்செய்தி துரியோதனனை எட்டியது. அவன் மிகுந்த ஆத்திரமடைந்தான். இறந்துபோனதாக கருதப்பட்ட பாண்டவர்கள் மீண்டும் உயிரோடு வந்ததை அவனால் தாங்கமுடியவில்லை.

பொறாமையால் அவன் பாஞ்சால தேசத்தின்மீது படையெடுத்தான். துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன், துரியோதனனை எதிர்த்தான். இரண்டு படைகளும் பயங்கரமாக மோதிக்கொண்டன. கவுரவப்படை பின்வாங்கியது. ஆனால் போர்க்களத்தில் கர்ணனும், சகுனியும் திருஷ்டத்யும்னனை தொடர்ந்து எதிர்த்தனர். இவர்களில் கர்ணனை நகுலன் எதிர்த்தான். அவனுடைய அம்புமழை கர்ணனை கடுமையாகத் தாக்கியது. காயமடைந்த அவன் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிவிட்டான்.

சகாதேவன் சகுனியை விரட்டியடித்தான். பீமன் தனித்து நின்று துரியோதனன் உள்ளிட்ட நூறு கவுரவர்களையும் அடித்து நொறுக்கினான். தோற்றுப்போன துரியோதனப்படை தன் நாட்டை நோக்கி ஓடிவிட்டது. இந்த நேரத்தில் கண்ணபிரான் பாஞ்சால நாடு வந்து சேர்ந்தார். அவர் பாண்டவர்களுடன் இணைந்து அவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லி வந்தார். பாண்டவர்கள் தங்களுக்கு கிடைத்த சீதன நாடுகளை நல்ல முறையில் ஆண்டனர்.

இந்நேரத்தில் அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் தன் தம்பி விதுரனுடன் ஆலோசனை செய்தான். பாண்டவர்களுக்கு உரிய நாட்டை கொடுத்து விடுவதே சிறந்தது என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி ஒரு தூதுவனை அனுப்பி பாண்டவர்களை அஸ்தினாபுரிக்கு வரவழைத்தான். அவர்களுக்குரிய ராஜ்ய பாகத்தை ஒப்படைத்து விட்டான். இதன்பிறகு தர்மருக்கே முடிசூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. தர்மரின் பட்டாபிஷேக நாளும் நெருங்கியது. வியாசரும் இன்னும் பல முனிவர்களும் தர்மரின் பட்டாபிஷேகத்தைக் காண வந்திருந்தார்கள். பட்டாபிஷேக நிகழ்ச்சிக்குப்பிறகு திருதராஷ்டிரன் தர்மரை அழைத்தான்.

மகனே! நீ உன் தம்பிகளுடன் காண்டவபிரஸ்தம் நகருக்கு செல். அங்கே தங்கியிரு, என்றான்.

தர்மருக்கு அந்நகருக்கு எப்படி செல்வதென யோசனை எழுந்தது. ஏனெனில் அந்த நகரம் காட்டுப்பகுதியில் இருந்தது. ஊரே பாழடைந்து போய்விட்டது. மனிதர்கள் யாரும் அங்கு வசிக்கவில்லை. இருந்தாலும் தம்பிகளை அழைத்துக் கொண்டு தர்மர் அங்கு புறப்பட்டார். கண்ணபிரானும் உடன் சென்றார். அவர் விஸ்வகர்மாவையும், இந்திரனையும் அழைத்தார். அவர்கள் கண்ணனை வணங்கி நின்றனர். இந்த காட்டை அழித்து இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அழகிய நகரத்தை நிர்மாணித்துக் கொடுங்கள். மூவுலகிலும் இதுபோன்ற நகரம் இருக்கக்கூடாது, என ஆணையிட்டார் கண்ணன். அதன்படி இந்திரனின் மேற்பார்வையில் விஸ்வகர்மா காண்டவபிரஸ்த நகரை அடையாளம் தெரியாமல் மாற்றிவிட்டார்.

இரவு நேரத்தில்கூட அந்த நகரம் ஜொலித்தது. எங்கு பார்த்தாலும் தங்கத்தாலான மாட மாளிகைகள், அழகிய அரண்மனைகள், பெரிய மதில்கள், தோரண வீதிகள், பூஞ்சோலைகள், தடாகங்கள் என அருமையாக அமைக்கப்பட்டிருந்தது அந்நகரம். கண்ணபிரான் அந்நகரை சுற்றிப்பார்த்தார். இந்திரனின் மேற்பார்வையில் கட்டப்பட்டதால் அந்த ஊருக்கு இந்திரப்பிரஸ்தம் என பெயர் சூட்டினார்.