Mahabharatham story in Tamil 58 – மகாபாரதம் கதை பகுதி 58

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 58

உத்தரகுமாரனுக்கு மிக்க மகிழ்ச்சி. தனக்கு தேரோட்ட அர்ஜுனனின் தேரோட்டி கிடைத்துவிட்டாள் என்பதில் பெருமைப்பட்டான். அவர்கள் போர்களத்துக்கு புறப்பட்டனர். அர்ச்சுனன் பேடி (அரவாணி) உருவத்துடன் தேரோட்ட உத்தரகுமாரன் ஏறிக்கொண்டான். போர்க்களத்தில் நுழைந்தானோ இல்லையோ, உத்தரகுமாரன் அலறி விட்டான். பிருகந்நளா! இவ்வளவு பெரிய படையுடன் துரியோதனன் வந்திருக்கிறானே! நமது சிறிய படை எப்படி தாக்குப் பிடிக்கும்? நான் துரியோதனனிடம் சிக்கி இறக்கப்போவது உறுதி. பசுக்கூட்டத்தை வேண்டுமானால் அவன் கொண்டு போகட்டும். உடனே தேரைத் திருப்பு, என்றான். பிருகந்நளை அதற்கு இணங்கவில்லை. இளவரசே! மாவீரனான விராட மன்னரின் மகனான நீங்கள் இப்படி அஞ்சுவது முறையல்ல. மேலும், நம்மூர் பெண்கள் கோழைகளை விரும்புவதில்லை. நீங்கள் புறமுதுகிட்டு ஓடினால், அவர்கள் பரிகாசம் செய்வார்கள். இப்படிப்பட்ட பெரிய படைகளைக் கண்டு அஞ்சக்கூடாது. போர்க்களத்துக்குள் வந்து விட்டவன், வெற்றி அல்லது வீரமரணம் என்ற வார்த்தைகளை மட்டுமே மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் அஞ்சாதீர்கள். நான் களத்துக்குள் செல்கிறேன். அம்புகளை மளமளவெனப் பொழியுங்கள், என்றாள்.

உத்தரகுமாரன் ஒரேபடியாக மறுத்து விட்டான். தேரில் இருந்து குதித்து ஓட ஆரம்பித்தான். பிருகந்நளைக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டது. அவள், விரட்டிச் சென்று அவனைப் பிடித்தாள். அவனை தேர்ச்சக்கரத்தில் வைத்துக்கட்டி, தேரை எங்கோ திருப்பினாள். பிருகந்நளை அர்ஜுனனாக இருந்த போது, விராட நாட்டு எல்லையில் தன்னுடைய ஆயுதங்களை ஒரு வன்னிமரப் பொந்தில் ஒளித்து வைத்திருந்தாள். அதை இப்போது எடுத்தாள். சக்கரத்தில் கட்டப்பட்டிருந்த உத்தரகுமாரனை விடுவித்து, இளவரசே! இந்த ஆயுதங்கள் சாதாரணமானவை அல்ல. இவை அர்ஜுனனுடையவை. இவற்றை எய்தால், எதிரிப்படைகள் தூள் தூளாகி விடும். சற்றுநேரம் எனக்கு நீங்கள் ரதசாரதியாக இருங்கள். நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன், என்றாள். அர்ஜுனனை எங்கே? என்று உத்தரகுமாரன் அவளிடம் கேட்ட போது, அவர் இப்போது தன் சகோதர்களுடன் அஞ்ஞான வாசத்தில் இருக்கிறார். அந்தப்பொழுது கழிய இன்னும் 4 நாழிகை நேரமே இருக்கிறது. அது கழிந்ததும், அவர் உங்கள் முன்னாலேயே வெளிப்படுவார், என்றதும் உத்தரகுமாரனின் மூளையில் ஒரு பொறி தட்டியது.

நம் முன் நிற்பவள் நிச்சயமாக ஒரு அரவாணி அல்ல. இவள் அர்ஜுனனாக தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இவ்வளவு எளிதில் இந்த ஆயுதங்களை எடுத்திருக்க முடியுமா? என சிந்தித்தபடியே அவளது காலில் விழுந்து ஆசி பெற்றான். தேர் மீண்டும் போர்க்களம் திரும்பியது. தேர் சக்கரத்தில் இளவரசனை வைத்துக் கட்டியதையும், புறமுதுகிட்டு ஓடுவது போல பாசாங்கு செய்து விட்டு, மீண்டும் களத்துக்குள் புகுந்திருப்பதையும் கண்ட விதுரர் குழப்பமடைந்தார். முதலில் இளவரசன் தேரில் வந்தான், இப்போது, தேரோட்டியாய் இருந்த அரவாணி தேரில் வருகிறாள். என்ன நடக்கிறது இங்கே என்று சிந்தித்தார். துரியோதனனின் படைத் தலைவர் துரோணாச்சாரியாரோ, வந்திருக்கும் அரவாணி நிச்சயமாக அர்ஜுனனே என்பதை உறுதி செய்து கொண்டார். இதற்குள் பிருகந்நளை யுத்த களத்தில் முனையில் நின்று, ஏய அம்பு அங்கியிருந்த பல தலையை ஒரே நேரத்தில் பறித்தனர். துரியோதனனுக்கு ஆதரவாக சண்டையிட வந்த ராஜாக்கள் ஓடிவிட்டனர்.

அப்போது விதுரர் துரியோதனனிடம், துரியோதனா! நீ அந்த அரவாணியின் செல்லாதே. அவள் இங்கே வரட்டும் இவள் அர்ஜுனனை விட பலசாலியாக இருக்கிறாள். சிவனிடம் அவன் பெற்ற பாசுபதிரத்தை விட மூன்று மடங்கு சக்தி கொண்ட அஸ்திரங்கள் இவளிடம் இருப்பதாக தோன்றுகிறது என்றார். துரோணரும், பீஷ்மரும் அவரது கருத்தை ஒப்புக்கொண்டனர். துரியோதனனும், கர்ணனனும் இதைக் கேட்டு ஆத்திரமடைந்தனர். என்ன பேசுகிறீர்கள்? ஒரு பேடியால் நம்மிடம் சண்டைக்கு வர முடியுமா? அதிலும் ஒற்றை ஆளாக! என்று எகத்தாளமாக பேசினான். இதற்குள் பிருகந்நளை விட்ட அம்பு பசுக்களை கவர்ந்து சென்ற வீரர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கவே, அவன் அவற்றை மீட்டு, போர்க்களத்தில் ஓரமாக நின்ற மேய்ப்பவர்களிடம் ஒப்படைத்தாள். அவர்கள் ஆரவாரத்துடன் திரும்பினர். இதோடு விடவில்லை பிருகந்நளை. துரியோதனனின் தேர் சாரதிக்கு குறி வைத்தான். அவன் சுருண்டு விழுந்து இறந்தான். பயந்து போன துரியோதனன், வேறு தேரில் ஏறி தப்பி ஓடினான்.

இதற்குள் நான்கு நாழிகை நேரம் கடந்து விடவே, பாண்டவர்களின் அஞ்ஞாத வாச காலம் முடிந்து விட்டது. பிருகந்நளை, தன் உருமாறி அர்ஜுனன் ஆகிவிட்டாள். இப்போது, வெகு வீரத்துடன் துரியோதனனை விரட்டிய அர்ஜுனன், ஏ துரியோதனா! பயந்தாங்கொள்ளியே! நீ தோற்றோடி வந்ததைப் பார்த்து உனக்கு சாமரம் வீசும் பெண்கள் கூட உன்னை மதிக்கமாட்டார்கள். நீ நிஜமான வீரன் என்றால், நின்று என்னுடன் போர் செய், என ஆரவாரம் எழுப்பினான். இதற்குள் பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோர் அர்ஜுனனைச் சூழ்ந்து அவனை போருக்கு அழைத்தனர். கர்ணனுடன் மோத அர்ஜுனன் ஆயத்தமானான். இருவரும் சமபலத்துடன் போரிட்டனர். வெற்றி தோல்வியின்றி யுத்தம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அர்ஜுனன் ஒரே சமயத்தில் மூன்று அம்புகளை விட்ட போது, அவை கர்ணனின் ரதசாரதியை அழித்தன. தேர் சாய்ந்தது. இதனால் கர்ணன் தலை குனிந்து போரில் இருந்து விலகி விட்டான். அர்ஜுனன் அவனை விரட்டவே, அவன் புறமுதுகிட்டு ஓடினான். ஓடுபவர்களைக் கொல்வது வீரர்களுக்கு அழகல்ல. அர்ஜுனன் அவனை விட்டுவிட்டான்.

அப்போது துரோணரின் மகன் அஸ்வத்தாமன், ஏ கர்ணா! தோற்று ஓடி வந்தாயே! வெட்கமாக இல்லை உனக்கு! பெரிய வீரனைப் போல் பேசுவது பெரிதல்ல! ஜெயித்துக் காட்ட வேண்டும், என்று வெந்து போன கர்ணனின் மனதில் வேல் பாய்ச்சும் வார்த்தைகளை பேசினான். இதற்குள், அர்ஜுனன் சில அம்புகளை வணக்கம் செலுத்தும் வகையில், தன் குருவான துரோணரை நோக்கி எய்தான். அவை அவரது பாதத்தில் விழுந்து, அர்ஜுனனின் நமஸ்காரத்தை தெரிவித்தன. அதை மகிழ்ச்சியோடு ஏற்ற துரோணர், தன் மாணவனுடன் போர் புரிவதற்காக தேரை விரட்டினார்.