இராமாயணம் கதை சுருக்கம் | Ramayanam Story in Tamil

இராமாயணம் கதை சுருக்கம் | Ramayanam Story in Tamil

கம்பராமாயணம் கதை சுருக்கம் PDF | Ramayanam Story in Tamil PDF

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள்.

சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீமந் நாராயணன் கோசலைக்கு ராமன் என்ற மகனாக அவதரித்தார். பூமியில் அரக்கர்கள் அட்டகாசம் அதிகமாயிற்று. தேவர்களிடமும் தங்கள் அட்டூழியங்களைச் செய்து பயமுறுத்தி வந்தார்கள். அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். ஆகவே ஸ்ரீமந் நாராயணன் அவர்களிடமிருந்து உலகத்தையும், தேவர்களையும் காப்பாற்றவே ராமராக அவதாரம் எடுத்தார்.

விசுவாமித்திரர் தாம் இயற்ற இருக்கும் வேள்விக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு ஸ்ரீராமன், லட்சுமணன் ஆகிய இருவரையும் தம்மோடு அனுப்பி வைக்கும்படி தசரதனிடம் கேட்டார். முதலில் மறுத்த தசரதன் பின்பு அனுமதி வழங்கினான். அவர்களை வேள்வி செய்ய இருக்கும் காட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில் தாடகை என்ற ஓர் அரக்கி குறுக்கிட்டாள். அவளை ஸ்ரீராமன் வதம் செய்தார். யாகம் தொடங்கியதும் அரக்கர்கள் மாரீசன் என்பவன் தலைமையில் அதை நடக்க விடாதபடி இடையூறு செய்தார்கள். ராமன் அரக்கர்களை அழித்தார். மாரீசனைத் தம் இராம பாணத்தால் சமுத்திரத்திலே கொண்டு போய்த் தள்ளுமாறு செய்தார். அதனால் மகிழ்ச்சியுற்ற விசுவாமித்திரர் அநேக அஸ்திரங்களை அவர்களுக்கு உபதேசித்து அயோத்திக்கு அழைத்து வந்தார். அப்படி வரும்போது கல்லாக சபிக்கப்பட்டுக் கிடந்த அகலிகை ஸ்ரீராமனின் பாத ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றுத் திரும்பவும் மானிட வடிவம் பெற்றாள்.

பின்பு அவர்களை விசுவாமித்திரர் ஜனகர் ஆட்சி புரியும் மிதிலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஜனக புத்திரியான சீதைக்கு உரிய கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நடந்தது. அந்த சுயம்வர மண்டபத்தில் ஒரு சிவதனுசு இருந்தது. அது யாராலும் தூக்கி நிறுத்தி வளைத்து நாணேற்ற முடியாத ஒன்று. அந்த வில்லை எந்தப் பராக்கிரமசாலி வளைத்து நாணேற்றுகிறானோ அவனுக்குத் தன் பெண்ணைத் தருவதாக அறிவித்திருந்தார் மிதிலை மன்னர் ஜனகர். பலநாட்டு மன்னர்கள் வந்து முயன்றும் சிவதனுசு முறியவில்லை. ஸ்ரீராமர் அதை வளைத்து நாணேற்றிக் காட்டவே அவருக்கு ஜனகர் சீதையைத் திருமணம் செய்து கொடுத்தார் திருமணம் முடிந்து தம் சுற்றம் சூழ அயோத்தி திரும்புகையில் ராமனைப் பரசுராமர் எதிர்த்தார். அவரிடம் இருந்த வில்லை ராமன் வளைத்து, பரசுராமரின் அகந்தையை அடக்கினார்.

நாடு திரும்பிய ஒரு சில நாள்கள் கழித்து, தசரதன் தன் மகன் ஸ்ரீராமனுக்குப் பட்டம் சூட்ட நினைத்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதனால் ராமரின் சிற்றன்னை கைகேயி மிகவும் சந்தோஷமுற்றிருந்தாள். அப்படி அவள் மகிழ்ச்சியாக இருந்த சமயம் மந்தரை என்ற வேலைக்காரி, கைகேயியிடம் துவேஷத்தை ஏற்படுத்தினாள். ராமன் பட்டத்தரசன் ஆகிவிட்டால் கோசலைக்கு பெருமையே ஒழிய கைகேயி உனக்கு ஏது பெருமை? மேலும் ஜனகர் புத்திரியான சீதை பட்டத்தரசி ஆவாள். ஏற்கனவே உன் தந்தையார் நாடாகிய கேகய நாட்டிற்கு ஜனகர் பகைவர். இந்நிலையில் உன் பிறந்த இடம் தாக்கப்படலாம் என்று மந்தரை சொல்ல கைகேயி மனம் மாறினாள். எனவே தசரதர் கைகேயிக்கு ஏற்கனவே தருவதாக வாக்களித்த இரண்டு வரங்களைப் பயன்படுத்தி, ஒரு வரத்தால் பரதன் ஆட்சிக் கட்டில் ஏறவும், மற்றொரு வரத்தால் ராமன் பதினான்கு ஆண்டுகள் வனம் புகுதல் வேண்டும் எனவும், தசரதனை கேட்குமாறு மந்தரை சொல்லிக் கொடுத்தாள். மந்தரையின் தூண்டுதலால் தசரதனிடம் அவ்வாறே வரங்களைத் தற்போதே தரவேண்டும் எனக் கைகேயி கேட்டாள். மன்னன் ராமன் மீது கொண்ட பிள்ளைப் பாசத்தை அளவிட முடியாது. கைகேயி கூட அப்படித்தான் இருந்தாள். ஆனால் தற்போது இவ்வாறு மாறிவிட்டாளே என வருந்தினார். தசரதன் எவ்வளவு கெஞ்சியும் அவளுடைய பிடிவாதத்தை மாற்ற மறத்துவிட்டாள். தந்தையின் நிலை கண்டு அவர் வாக்கை நிறைவேற்றச் சித்தமானார் ராமன். பரதனுக்கு ஆட்சியை அளித்து விட்டு ராமன் காட்டிற்குப் போனார். அவரோடு லட்சுமணனும் சீதையும் உடன் சென்றார்கள்.

தன் பிரியமான மகன் கானகம் சென்றான் என கேள்விப்பட்ட தசரதன் அத்துயரம் தாளாமல் உயிர் துறந்தான். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கியது. காட்டுக்குச் சென்ற ராமனுடன் கங்கைக் கரையில் குகன் என்ற வேடன் நட்புக் கொண்டார். அவன் உதவியால் கங்கையைக் கடந்து பரத்வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு ராமன் வந்தார். அங்கு அவரது உபசாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் சித்திரகூடம் சென்று அங்கு பர்ண சாலையை அமைத்துக் கொண்டார். அங்கு ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் தங்கினார்கள். இந்நிகழ்ச்சிகள் நடக்கும்போது பரதன் தன் தாய்வழிப்பாட்டன் நாடாகிய கேகய நாட்டிற்குப் போயிருந்தான். அயோத்திக்கு அவன் மீண்ட சமயம் தன்னைப் பெற்ற அன்னையின் பேராசையால் ஏற்பட்ட சம்பவங்களை தெரிந்து மிகவும் வருந்தினான். மூத்தவன் இருக்க நான் எப்படி முடி சூடுவது என்று பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டான். அத்துடன் வனத்திற்குச் சென்று சகோதரர்களை அழைத்து வரப்போனான். சித்திரகூடம் சென்றான். தந்தையின் மரணச் செய்தியைச் சொன்னான். சொல்லிவிட்டு அயோத்தி நாட்டை வந்து ராமன்தான் ஆள வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆனால்

ஶ்ரீ ராமர் மறுத்து விட்டார். பின்பு, அங்கேயே மிகவும் துயருற்ற ராமனும், சகோதரரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தனர். பரதனிடம் ராமன், பரதா! உன் விருப்பப்படி நான் அயோத்திக்கு வருவது சரியல்ல. தந்தையின் வாக்குப் பொய்யாகி விடும். நானும் என் வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வனம் வந்திருக்கிறேன். அவருக்கு நீயும் மகன் என்ற முறையில் அயோத்தி சென்று மக்களுடைய நலத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்து என்றான். அண்ணா! அயோத்தி அரசுக்கு உரியவர் தாங்கள். நீங்கள் அங்கு வராமல் நான் அயோத்தி திரும்பமாட்டேன் என்ற சபதம் எடுத்து இங்கு வந்திருக்கிறேன். ஆக தயவு செய்து தாங்கள் பட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்! என்று பரதன் பணிந்து உரைத்தான். தம்பி! அரசன் இல்லாத மக்கள் தவிப்பார்கள். உடனே நீ அயோத்திக்குப் போக வேண்டும்! என்றார் ஶ்ரீராமர். அண்ணா! அப்படியானால் நான் உங்கள் ராஜ்யத்தை உங்கள் பிரதிநிதியாகவே ஆட்சி செய்வேன். அதற்காகத் தாங்கள் தங்களது பாதுகைகளை எனக்குத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தினான். ஶ்ரீராமர் தமது பாதுகைகளைக் கொடுத்தார். அவற்றைத் தலை மேல் தாங்கிக் கொண்ட பரதன், அயோத்திக்குப் போகவில்லை. ராமனின்றி தலைநகர் போவதில்லை என்ற உறுதி பூண்டிருப்பதால் நந்திக்கிராமம் என்ற இடத்திற்குச் சென்றான். ராமனுடைய பாதுகைகளைச் சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து அவருடைய பிரதிநிதியாகவே இருந்து அரசு காரியங்களை மேற்கொண்டான்.

ஸ்ரீராமர், சீதை லட்சுமணுடன் அத்திரி முனிவர் ஆசிரமம் போனார்கள். அங்கு தங்கி அவருடைய உபகாரங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார்கள் அவர்கள் செல்லும் வழியில் விராதன் என்ற அரக்கன் குறுக்கிட்டான். அவனை அழித்துவிட்டு அகஸ்தியர் ஆசிரமம் சென்றார்கள். அவர் வில்லும் அஸ்திரங்களும் கொடுத்து ஶ்ரீ ராமருக்கு உதவினார். அங்கிருந்து கோதாவரி நதி தீரத்திற்குப் போகும் வழியில் பறவைகளின் அரசனான ஜடாயுவைச் சந்தித்தார். அவரோடு அளவளாவிய பின்னர் பஞ்சவடி வந்தார். பர்ணசாலை அமைத்து அவர்கள் மூவரும் அங்கு தங்கினர். அந்தக் காட்டின் பெயர் தண்டகாருண்யம் என்பதாகும். ராமர் அங்கு வந்து சேர்ந்ததால் அங்குள்ள முனிவர்கள் அரக்கர் பயமின்றி வாழ முடிந்தது.

அங்கே ஒருநாள் இராவணன் என்ற இலங்கேஸ்வரனுடைய தங்கை சூர்ப்பனகை என்பவளைக் காண நேர்ந்தது. அவள் ஶ்ரீராமருடைய அழகைக் கண்டு மயங்கினாள். அவரை அடைய ஆசைப்பட்டாள். ஆயினும் தன்னிலும் அழகு மிகுந்த சீதை அவன் கூட இருக்கும் வரை தன் ஆசை நிறைவேறாது என்ற முடிவுக்கு வந்தாள் சூர்ப்பனகை. பேரழகியாக வடிவம் தாங்கிப் பஞ்சவடிக்குள் நுழைந்தாள் சூர்ப்பனகை. லட்சுமணனுக்கு அவளுடைய தீய எண்ணம் தெரிய வந்தது. அதனால் அவன் அவளுடைய மூக்கையும், காதுகளையும் அறுத்து அவளை அவமானப்படுத்தி விரட்டி அடித்தான். இதை அவளுக்குப் பக்கத்தில் இருந்த கரன், தூஷணன் என்ற இரு சகோதரர்களுக்கும் தெரிவித்தாள். அவர்கள் தம் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பொறாதவராக ராம லட்சுமணர்களைக் கொன்று விடுவதாகக் கூறி அவர்களுடன் போரிட வந்தார்கள். ராமர் தன்னந்தனியாகவே இருந்து மிகவும் குறுகிய காலத்தில் அவர்கள் இருவரையும் சம்ஹரித்தான்.

சூர்ப்பனகை உடனே இலங்கைக்கு ஓடினாள். ராவணனாகிய தன் சகோதரனிடம் கர தூஷணாதியர் இராமனால் வதம் செய்யப்பட்டதும், தான் காது, மூக்கு அறுபட்டதையும் உள்ளம் உருக எடுத்துச் சொன்னாள். அதோடு அவள் நிறுத்தினாளா? இல்லை. ராமன் மனைவி சீதை பேரழகி. அந்த அழகு பிம்பத்தை அவன் அடைய வேண்டும் என்ற ஆசைக்கனல் அவன் உள்ளத்தில் தோன்றும்படி சொன்னாள். இதைக் கேட்டதும் சீதையை அபகரித்துக் கொண்டு வந்து தன் அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என ராவணன் தீர்மானித்தான். மாயவேலை செய்வதில் அதிசாதுர்யமான மாரீசன் என்ற அரக்கனைப் பொன்மான் உருக்கொண்டு பஞ்சவடியில் திரியச் சொன்னான். அப்படி மானாகத் திரிந்து ராம லட்சுமணர்களை அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி அழைத்துச் செல்லுமாறு ஏற்பாடு செய்திருந்தான். அவ்வாறே மாரீசன் பொன்மானாக மாறினான். பஞ்சவடிக்குச் சென்ற ராமர் சீதை உள்ள பர்ணசாலைப் பக்கம் நடமாடினான். தகத்தகாயமாக மின்னும் பொன்மானைக் கண்டாள் சீதை. அதைத் தனக்குப் பிடித்து தருமாறு ராமனை வேண்டினாள். லட்சுமணனோ தேவி! அது உண்மையான மான் அல்ல. உங்களையும் மற்றோரையும் ஏமாற்ற வந்த மாயமான்! என்றான். சீதை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்ரீராமர் பர்ணசாலையில் லட்சுமணனைக் காவலாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு மானைத் துரத்தினார். கையில் வில்லோடு தன்னை தொடர்ந்து வரும் ஸ்ரீராமனிடம் அகப்படாத மாயமான் அவரை வெகுதூரம் இழுத்துச் சென்றது. அலைச்சலில் சினந்த ராமர் ஒர் அம்பு விட்டு அழகிய மானைக் கொன்றார். மாரீசன் உயிர் விடும் போது ராமனுடைய குரலைப் போன்று மாற்றிக் கொண்டு ஹே லட்சுமணா! ஹே சீதா என்று அலறிய படியே உயிரை விட்டான். சீதை பர்ணசாலையில் இருந்தாலும் அவளுக்கு அந்தக் குரல் கேட்டது. அவள் அதனால் வேர்த்து வெலவெலத்துப் போய், லட்சுமணா! உன் அண்ணாவுக்கு ஏதோ ஆபத்து என நினைக்கிறேன். நீ சீக்கிரம் போய் பார் என்று லட்சுமணனை அங்கிருந்து போய்ப் பார்த்து வரும்படி வேண்டினாள். தேவி! இது அந்த மாயமானுடைய குரல். என் சகோதரனை வெல்பவர் இந்த பூமியில் எங்கும் கிடையாது. ஆகவே கவலை வேண்டாம்! என்றான் லட்சுமணன். இப்படி சொன்னதும் அவளுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. லட்சுமணா, நான் சொல்வதைக் கேள், நீ உடனே ஓடிச்சென்று உன் அண்ணனுக்கு என்ன நேர்ந்தது என்று பார்! என ஆவேசமாகக் கூறினாள். சீதையைப் பர்ணசாலையில் தனியே விட்டு விட்டுத் தன் அண்ணனைத் தேடிச் சென்றான் லட்சுமணன்.

அந்த சமயம் பஞ்சவடியில் ராவணன் ஏற்கனவே வந்து பதுங்கி இருந்தான். ஓர் சந்நியாசியாய் பர்ணசாலைக்கு வந்து பிச்சை கேட்டான். சீதை பிச்சை போட வந்தாள். அப்படியே அவளை கவர்ந்து கொண்டு விமானத்தில் ஏறி பறந்து போனான் ராவணன். பறக்கும் ஆகாய வீதியில் பறவைகளின் அரசனான ஜடாயு வந்து எதிர்த்தான். அடாத செயலுக்கு அழிவுகாலம் வந்து சேரும் என்று சொல்லிவிட்டு அவன் ராவணனைத் தாக்கினான். ராவணனோ ஜடாயுவை அடித்துப் பலமான காயங்களை ஏற்படுத்தி விட்டு அவனைக் கீழே தள்ளி விட்டு நேரே இலங்கைக்குப் போனான் மாரீசனைக் கொன்ற ராமன் பர்ணசாலைக்குத் திரும்பினார். அங்கு வரும் வழியில் லட்சுமணன், தங்களுக்கு ஏதோ ஆபத்து என பார்த்து வரும்படி சீதாதேவி என்னை அனுப்பினார் என ராமனிடம் சொன்னான். இருவரும் பெருத்த கலக்கமுற்று பர்ணசாலைக்கு திரும்பினார்கள். அங்கு சீதை இல்லாததைக் கண்டு கலக்கமுற்றனர். இருவரும் சீதையை வனாந்தரம் முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காயங்களுடன் ஜடாயு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டனர். ஜடாயுவை தன் மடியில் கிடத்தினார் ஶ்ரீராமர். ராவணன் சீதையை கடத்திச் சென்றதை அறிவித்து விட்டு உயிர் நீத்தான் ஜடாயு. ஜடாயுவுக்கு ஈமச்சடங்குகளை எல்லாம் செய்து விட்டு ராமனும், லட்சுமணனும் அங்கிருந்து கிளம்பினார்கள். கபந்தன் என்ற ஓர் அரக்கன் அவர்களை இடைமறித்தான். அவனோ பிறப்பால் அரக்கன் கிடையாது. சாபத்தின் காரணமாக அவன் அரக்கனாகத் திரிந்தான். அவனை அவர்கள் வதம் செய்யவே சாப விமோசனம் பெற்றான். சாபவிமோசனம் ஆனதும் அவன் உடல் தேஜோமயமாகத் திகழ்ந்தது. அந்த ஒளிமிகுந்த உடலுடன் அவர்களை வலம் வந்து வணங்கி அவர்களைச் சபரியிடம் போகுமாறு வேண்டினான்.

அவர்கள் சபரியிடம் போனார்கள். அவள் மிகவும் பக்தி சிரத்தையோடும், அன்போடும் உபசரித்தாள். அவள் ராமருக்குப் பழவகைகளைக் கொடுக்கும் முன்பு தான் கடித்துச் சுவை பார்த்துவிட்டே அவருக்குக் கொடுத்தாள். அதைக் கண்டு பூரிப்பும், ஆனந்தமும் அடைந்தார் ஶ்ரீ ராமர். அவள் கடித்துக் கொடுத்தப் பழங்களை விரும்பி சாப்பிட்டார். அவள் ராமரையும், லட்சுமணரையும் மதங்கமலைக்குப் போகும்படி அறிவுறுத்தினாள். மேலும் அங்கு சென்றால் அந்த மலையைச் சேர்ந்த சுக்ரீவன், அனுமன் முதலியோர் சீதையை மீட்கப் பெரிதும் உதவுவார்கள் என்றும் சொன்னாள். பகவான் அவளுக்கு மோட்சத்தைக் கொடுத்து விட்டு அங்கிருந்து மதங்கமலைக்குப் புறப்பட்டார்.

சுக்ரீவன் மதங்கமலையில் அனுமனோடு தங்கியிருந்தான். கிஷ்கிந்தை மன்னனான வாலியின் சகோதரன் சுக்ரீவன். அவனை அவன் அண்ணன் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டதால் அவனுக்குப் பயந்து மதங்கமலையில் ஒளிந்திருந்தான். ராம லட்சுமணர்களை அந்த மலைச்சாரலில் பார்த்தவுடன் அவர்கள் தன் அண்ணா வாலியால் அனுப்பப்பட்டுத் தனக்கு துன்பம் விளைவிக்க வருகிறார்களோ என்று பயந்தான். எனவே அவர்களை யார் என்று தெரிந்து வரும்படி அனுமனை அனுப்பினான். அவர்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுமன் ஸ்ரீராமனிடம் மிகுந்த மதிப்புக் கொண்டான். பிறகு சுக்ரீவனிடம் ராம, லட்சுமணர்களை அழைத்துச் சென்றான். சுக்ரீவனைச் சந்தித்து விவரம் அறிந்ததும் அவனைத் தன் சகோதரர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு அவனுடைய துயரத்தைத் துடைப்பதாக வாக்குறுதி கொடுத்தான். எனினும் சுக்ரீவனுக்கு அவனிடம் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. காரணம் வாலியை ராமன் ஒருவனாகக் கொல்ல முடியாது என்று அவன் நினைத்தான். காரணம் வாலியும் வரம் பெற்றவன், அவனை எதிர்ப்போர் பலத்தில் பாதி அவனிடம் போய் விடும். அப்படிப்பட்டவனை ஒரு தெய்வம் தான் வெல்ல முடியுமே தவிர, ஒரு மனிதன் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கை அவனிடம் வலுத்து இருந்ததே இதற்கு காரணம். பின்னர் வாலியை யுத்தத்திற்கு அழைக்கும்படி சுக்ரீவனை அனுப்பினார். வாலி வந்தான். சுக்ரீவனுடன் போரிட்டான். அப்படி அவர்கள் இருவரும் போரிடும் போது ஶ்ரீராமர் வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றார். சுக்ரீவனைக் கிஷ்கிந்தை மன்னன் ஆக்கினார். அதற்குப்பின் சீதையை தேட பல பாகங்களுக்கும் வானரப் படைகளை அனுப்புவதாகச் சொன்னான் சுக்ரீவன். அப்போது மழைக்காலமாக இருந்ததால் சிறிது காலம் கழித்து அனுப்புவதாக வாக்குறுதி அளித்தான். பின் தான் கூறிய வாக்குறுதியை மறந்தே போனான் சுக்ரீவன். அவன் சிற்றின்பத்தில் கட்டுண்டு கிடக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட ராமர், லட்சுமணனை அவனிடம் அனுப்பி வைத்தான். அங்கே மதிமயங்கிக் கிடந்த சுக்ரீவனைப் பார்த்து, வாலியைக் கொன்ற அஸ்திரத்தைப் போல ஆயிரக்கணக்காண அஸ்திரங்கள் இருக்கின்றன அதை மறக்க வேண்டாம்! என்று தெரிவித்தான். அதைக் கேட்டதும் தான் செய்த தவறை உணர்ந்தான் சுக்ரீவன். ஶ்ரீராமரின் பாதங்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். அதன்பின் சீதையைத் தேட நாலாப்புறமும் வானரப் படைகளை அனுப்பினான்.

அப்படி சென்ற படைகளில் தெற்கே சென்ற படைகளை அனுமன், அங்கதன், ஜாம்பவான் தலைமை தாங்கி நடத்திச் சென்றனர். அவர்கள் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காமல் மகேந்திர மலைக்கு வந்தார்கள். முயற்சியில் தோற்றாலும் உடனே அவர்கள் கிஷ்கிந்தை திரும்பவில்லை. சீதாபிராட்டியைப் பார்க்கும் பாக்கியம் ஜடாயுவுக்குக் கிடைத்தது மாதிரி தங்களுக்குக் கிடைக்கவில்லையே என அவர்கள் ஏங்கினர். அந்த சமயத்தில் அருகாமையில் தான் ஜடாயுவின் தம்பி சம்பாதி இருந்த விவரம் தெரிய வந்தது. ராம லட்சுமணர்களுடைய துன்பத்தை அறிந்த சம்பாதி சீதையை ராவணன் சிறை வைத்திருக்கிற சேதியை சொன்னான். அனுமனை அனுப்பி கடலைத் தாண்டி ராவணன் அவளை எங்கே சிறை வைத்திருக்கிறான் என்று அறிந்து வரும்படியும் ஆவேசமாகக் கூறினான். அதே போல எல்லோரும் அனுமனை அவ்வாறு வேண்டிக்கொண்டார்கள்.

பகவானிடம் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் அவன் விஸ்வரூபம் எடுத்தான். கடலைத் தாண்டி இலங்கையை அடைந்து அங்கு சீதையை நெடுகத் தேடினான். கடைசியாக அசோக வனத்திற்குள் அவன் போனதும் அங்கே சீதா, ஸ்ரீராமரை நினைத்து வருந்தி அழுது கொண்டிருந்தாள். இதைக் கண்ட அனுமன் மிகவும் வருந்தினார். அவளைச் சுற்றி காவலில் இருந்த பெண்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது சீதாதேவியை நேரில் பணிந்து தொழுதான். தான் யார் என்பதை அவளிடம் எடுத்து கூறினான். மேலும் தங்களைத் தான் நான் தேடி வந்துள்ளேன், அதற்கு அடையாளமாக ஸ்ரீராமர் கொடுத்து அனுப்பிய கணையாழியைக் கொடுத்து வணங்கினான். அதைத் தன் கைகளில் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள் சீதா. எம்பெருமானுடைய கணையாழியைப் பெற்று மகிழ்ந்த சீதா தன்னிடமிருந்த சூடாமணியை அனுமனிடம் கொடுத்தாள். பின்பு இலங்கையில் தான் இருக்கும் நிலைமையை எடுத்துக் கூறி, பிரபுவை தயவுசெய்து சீக்கிரமே வந்து என்னை சிறை மீட்கச் சொல்வாயாக என்று வேண்டிக் கொண்டாள். அவளைப் பார்த்து விட்டோம் என்ற களிப்பில் உடனே அனுமன் திரும்பவில்லை.

ராவணன் கோட்டைக்குள் இருக்கிற நிலைமையையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் ராவணனுடைய அசோகவனத்தை அழிக்கும் வேலையில் இறங்கினான். இந்த சேதி ராவணன் காதுக்கு எட்டியது. உடனே அந்த வானரத்தை பிடித்து வருமாறு தன் பேரனும், தன் மகன் இந்திரஜித்தின் பிள்ளையான அட்சயன் தலைமையில் ஒரு சேனையை அனுப்பினான். அனுமன் அவர்களை ஒரு சில கணப் பொழுதில் மாய்த்து விட்டான். அதனால் சீற்றம் கொண்ட ராவணன் மகன் இந்திரஜித்தே நேரில் புறப்பட்டு அசோகவனத்திற்கு வந்தான். அவன் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தினால் அனுமனைக் கட்டி இழுத்து வந்து ராவணன் அவையில் நிறுத்தினான். அப்போது அவனைப் பார்த்து ராவணன், அத்துமீறி அட்டகாசம் செய்யும் வானரமே நீ யார்? என்று வினவினான். என் பெயர் அனுமன். நான் கோசலை நாட்டு மன்னன் ஸ்ரீராமனுடைய தூதன். அதோடு கிஷ்கிந்தை அரசன் சுக்ரீவனுடைய தாசன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு, மேலும் ராவணனிடம் ஹே! ராவணா! நீ புத்திகெட்டுப் போய் தேவி சீதாவை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறாய். இனியும் நீ தாமதியாமல் ஸ்ரீதேவியை எம்பெருமானிடம் ஒப்படைத்து விடு. அவர் உன்னை மன்னித்து உனக்குத் திருவருள் தருவார்! என்று எடுத்துச் சொன்னான். அப்போது ராவணன் அவனைக் கொன்றுவிடுங்கள் என்று கூறினான். தூதனாக வந்த அனுமனை நாம் கொல்வது தர்மம் அல்ல என்றான் ராவணன் தம்பி விபீஷணன். உடனே இலங்கேஸ்வரன் தன் ஆட்களை அழைத்து ஏதாவது அவமானம் செய்து அனுமனை அனுப்பலாம் என்று சொல்லி, அனுமன் வாலில் தீ வைத்து அவனை விரட்டி விடுங்கள் என்று கட்டளை இட்டான். அனுமனோ வாலில் எரிந்த நெருப்பைக் கொண்டு இலங்கையை எரித்து விட்டு மகேந்திரமலைக்கு திரும்பினான்

அங்கிருந்து எல்லாருமாக ஸ்ரீராமரை அடைந்தனர். கண்டேன் தேவியை! என்று அனுமன் ஸ்ரீராமரிடம் சொல்லி விட்டு அவள் அடையாளமாகக் கொடுத்து அனுப்பிய சூடாமணியைக் கொடுத்தான். தேவியின் சூடாமணியைக் கண்டதும் ராமர் கண்ணீர் விட்டார். சீதாதேவியின் நிராதரவான நிலையை நினைத்துப் பெரிதும் வருந்தினார். சுக்ரீவனை அழைத்து யுத்தத்திற்குத் தயாராகும்படி கேட்டுக் கொண்டார். வானர சேனைகளுடன் அனைவரும் புறப்பட்டு சமுத்திரக் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ராமனிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக சமுத்திரத்தில் மலைகளையும், பாறைகளையும் போட்டு இலங்கைக்குப் போய்ச்சேர பாலம் அமைத்தார்கள். அதன் வழியே அனைவரும் இலங்கைத் தீவுக்குப் போய்ச் சேர்ந்தனர்.

ராவணனுடைய தம்பி விபீஷணன் அசுர குலத்தில் பிறந்தாலும் தன் சகோதரன் தர்மத்திற்கு விரோதமாகப் பிறர் மனைவியை சிறை எடுத்து வந்திருப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே அவன் தன் அண்ணனிடம் தர்மங்கள் எடுத்துச் சொன்னான். அண்ணா! நீ இன்று சீரும் சிறப்புமாக இருக்கக் காரணம் பரமேஸ்வரனாகிய சிவபெருமானிடம் நீ பெற்ற வரம்; அவரும் உனது ஈனச் செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். பிறர் மனைவியை விரும்புவது தகாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே. ஆகவே இத்தகைய பாதக செயலை விட்டுவிடு. சீதாதேவியை நாம் ராமரிடம் ஒப்படைத்து சரணடைந்து விடுவோம். அவர் நம்மை மன்னித்தருள்வார் என்றான். ராவணன் கோபமாக விபீஷணனைப் பார்த்து, அசுரகுலத்துக்கே நீ இழுக்கு! நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றான். இனியும் இவனுடன் இருப்பது பாதகம் என்றெண்ணிய விபீஷணன் ராமரிடம் சரண் புகுந்தான். அப்போதே ஶ்ரீராமர் இலங்கையை அவனுக்குக் கொடுத்து முடிசூட்டி வைத்தார். யுத்தம் தொடங்கும் முன் ஒருவேளை அரக்கர்கள் குணம் மாறலாம் என்று நினைத்து ஶ்ரீராமர். ராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்பினான். ராவணனோ சீதையை விடுவிக்க முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து விட்டான். யுத்தம் மூண்டது. வானர சேனைகள் அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்தனர். ராவணன் தன் படைகளுடன் ராமனை எதிர்த்தான். அவனுடைய சேனைகள் அனைத்தையும் வீழ்த்தி, வில்லை முறித்து யுத்த களத்தில் ராவணனை தலை குனியச் செய்தார் ஶ்ரீராமர். நிராயுதபாணியாக இலங்கேஸ்வரன் நின்ற போது, இன்று போய் நாளை படை திரட்டி மீண்டும் வா! என்று மேலும் அவகாசம் கொடுத்தார் ஶ்ரீ ராமர்.

அவமானம் தாங்க முடியாத ராவணன் அரக்கர் சேனையை ஒன்று திரட்டி தன் தம்பி கும்பகர்ணனைப் போர்க்களத்திற்கு அனுப்பினான். அவன் வதம் செய்யப்பட்டதும் தன் குமரன் அதிகாயனை அனுப்பினான். அவனும் கொல்லப்பட்டதும் இந்திரஜித் யுத்தகளத்தில் குதித்தான். இந்திரஜித், லட்சுமணனையும் மற்ற வீரர்களையும் நாக பாசத்தால் கட்டினான். கருடன் பிரத்தியட்சமாக அந்த பாசத்தை அறுத்து அத்தனை பேரையும் விடுவித்தான். மறுபடியும் இந்திரஜித் அவர்களை பிரம்மாஸ்திரத்தால் கட்டினான். அனுமன், ஜாம்பவானைத் தவிர அத்தனை பேரும் மயங்கி விழுந்தன. அனுமன் விரைந்து போய் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து எல்லோரையும் பிழைக்கச் செய்தான். இந்திரஜித் தன் நாக, பிரம்ம பாசங்கள் தோல்வியடைந்ததால், நிகும்பலை என்ற யாகத்தைச் செய்யத் தொடங்கினான். அதற்காக ஓர் இரகசிய இடத்தைத் தேர்ந்து எடுத்து இந்த வேள்வியை ஆரம்பித்தான். அதனால் யாராலும் தன்னைக் கொல்ல முடியாத வரம் பெற்றுப் போர் முனைக்கு வர ஆயத்தமானான். அதை அறிந்த விபீஷணன் ராம லட்சுமணர்களிடம் விபரம் சொல்லி அந்த ரகசிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று யாகத்தைத் தடுத்து, இந்திரஜித்தை வதம் செய்ய வைத்தான்.

தன் மகன் இந்திரஜித் இறந்து விட்டான் என்ற சேதி கேட்டு ராவணன் ஆடிப் போனான். எனினும் ஸ்ரீராமனிடம் அவன் பணிய விரும்பவில்லை. தன் மூல பலத்தைத் திரட்டிக் கொண்டு போருக்கு வந்தான். தமது பாணத்தால் ராவணனை சம்காரம் செய்தார் ராமர். அப்போது தேவர்கள் அவர் மீது மலர் மாரி பொழிந்தனர். கற்பகாலம் ஜீவித்திருக்க விபீஷணனுக்கு அனுக்கிரகம் செய்து இலங்கை மன்னனாக முடிசூட்டி வைத்தார் ஶ்ரீராமர்.

பின்னர் அனைவரும் அயோத்திக்கு ராமர் சீதையுடன் புஷ்ப விமானத்தில் செல்லும் போது வழியில் கிஷ்கிந்தையிலும் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கிச் சென்றார்கள். அயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. பரதன் ஸ்ரீராமரை சிங்காசனத்தின் அமர்த்தினான். வசிஷ்டர் முதலான ரிஷிகள் ராமனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து மகுடாபிஷேகம் செய்தனர். ஸ்ரீராமர் சீதையுடன் தரும நெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். கோசலை நாடு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. ஒரு நாள் ராமர் நகர் வலம் வந்தார். அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி பேசுவதைக் கேட்டார். அங்கே சீதாதேவியைப் பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டார். அந்த வார்த்தைகள் ராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என துயருற்றார். இதன் காரணமாக உலக நிந்தனைக்குப் பயந்து கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார். தாங்க முடியாத துயரத்துடன் வந்த ஜானகியை வால்மீகி தன் ஆசிரமத்தில் தங்கச் செய்து அவளை நன்கு கவனித்துக் கொண்டார். அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அந்த குழந்தைகளுக்கு லவன், குசன் என்று பெயரிட்டார் வால்மீகி. அதே சமயம் அயோத்தியில் லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது, பரதனுக்கு தட்சன், புஷ்கரன், சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன் என பிள்ளைகள் பிறந்தனர். பரதன் திக் விஜயம் செய்து கந்தர்வர்களை வென்று ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து ராமனிடம் சமர்ப்பித்தான். சத்ருக்கன் லவணன் என்ற ஓர் அரக்கனை வதம் செய்தான். அவன் மதுவனத்தில் மதுரை என்ற ஒரு பட்டணத்தை உண்டாக்கினான். வால்மீகி மகரிஷி ராமனுடைய சரித்திரத்தை ராமாயணம் என்ற பெயரில் இயற்றி அதை லவகுசர்களுக்குச் சொல்லி வைத்தார். இருவரும் ஒருநாள் இதை ராமனுடைய அரசவையில் அரங்கேற்றினார்கள். அவர்களை தம் குமாரர்கள் என்று அறிந்த ராமர், மேலும் வால்மீகி ஆசிரமத்தில் சீதை இருக்கிறாள் என்பதையும் அறிந்து தன்னிடம் அழைத்து வர எண்ணினார். ஸ்ரீராமனுடைய உள்ளக்கிடக்கையை அறிந்த வால்மீகி அவளைப் புனிதவதி என்று ஏற்றுக்கொள்ளும்படி கூறினார்.

சீதையோ தான் கற்புத்தன்மையில் இருந்து கொஞ்சமும் வழுவாது இருக்கிறேன் என்பது உண்மையானால் தன்னை பூமாதேவி அழைத்துக் கொள்ளட்டும் என்று தெரிவித்தாள். அவள் இப்படிச் சொன்னதும், பூமி இரண்டாகப் பிளந்தது. அதனுள்ளிருந்து பூமாதேவி வெளிப்பட்டு சீதையை தன் இரு கைகளில் ஏந்தியவளாக அழைத்துக் கொண்டு மறைந்தாள். தன் விருப்பத்திற்கு மாறாக பூமாதேவி தன் தர்மபத்தினியை பிரித்து சென்றுவிட்டாள் என ராமர் கோபமடைந்தார். அப்போது பிரம்ம தேவன் தோன்றி ராமனை சமாதானப்படுத்தி சீதா தேவியின் பூலோக வாசம் முற்றுப் பெற்றது. அவள் வைகுண்டத்தில் உங்கள் வருகைக்காக காத்திருப்பாள் என்று பிரம்மா சொன்னார். அதன் பிறகே ராமர் சாந்தமடைந்தார்.

ராமர் தன் புதல்வர்கள் லவ, குசனை ஏற்றுக் கொண்டார். பதின்மூன்றாயிரம் ஆண்டுகள் ஸ்ரீராமர் ஆட்சி செய்து விட்டு ராஜ்யத்தை தன் புத்திரர்களுக்கும், தமது சகோதரர்களின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்தார். அதன் பிறகு சரயு நதியில் இறங்கி வைகுண்டம் சேர்ந்தார். அவரைப் பின் தொடர்ந்து சங்கு சக்ர அம்சங்களாகப் பிறந்த சத்ருகன், பரதனும் ஆதிசேஷனான லட்சுமணனும் பூலோகத்தை விட்டு வைகுந்தம் சேர்ந்தனர்

ஜெய் ஶ்ரீராம்….