திருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை | Thiruvilakku Pooja for Getting Married

திருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை | Thiruvilakku Pooja for Getting Married

திருமண தடையை நீக்க வீட்டிலேயே எளிய முறையில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி?

ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டிலேயே திருவிளக்கு பூஜை செய்வதால், செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கி, மனதிற்கு பிடித்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். மேலும் அம்பிகையின் அருளால் வரும் காலம் வரம் தரும் காலங்களாக அமையும்.

பொதுவாகவே ஆடி மாதம் இறை வழிபாட்டுக்கும், பூஜைகள் செய்வதற்க்கும் உகந்த மாதம். இப்படிப்பட்ட உன்னதமான அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் காற்றும் மழையுமாக இருக்கும் காலம்.

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத அல்லது திருமண தடையை சந்திக்கும் பெண்கள் ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமையில், குத்துவிளக்கு வழிபாடு செய்வதால், திருமகளின் அருளால் திருமண பாக்கியம் விரைவில் கைகூடி வரும்.

ஆடி மாத வெள்ளிக் கிழமை திருவிளக்கு பூஜை செய்யும் முறை:

  • ஆடி மாத வெள்ளிக் கிழமைக்கு முந்தைய நாளிலேயே வீட்டையும் பூஜை அறையையும் நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து குளித்து பின், வாசல் தெளித்து கோலமிட்டு, வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
  • அதன் பிறகு, பூஜையறையில் கோலமிட்டு, பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு பூக்கள் இட வேண்டும்.
  • உங்களால் முடிந்த நெய்வேத்யம் செய்து படைக்கவும்.
  • பின் ஒரு வாழை இழையில் குத்து விளக்கை வைத்து குத்துவிளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அதன் பிறகு எண்ணை ஊற்றி திரியிட்டு தயாராக வைக்கவும்
  • அதன் பிறகு விநாயகரையும், உங்களுடைய குல தெய்வத்தையும் மனதார வழிப்பட்டு அம்பிகையை மானசீகமாக வேண்டி குத்துவிளக்கை ஏற்றுங்கள்.
  • குத்து விளக்கு ஏற்றும் பொழுது “ஓம் ஸ்ரீயை நமஹ” அல்லது “ஓம் மகாலக்ஷ்மியே போற்றி” என்று சொல்லி ஏற்றவும்.
  • விளக்கு ஏற்றிய பின்பு மனதார அம்பிகையை நினைந்து, அம்பாளுக்கு உகந்த மந்திரங்களை சொல்லி விளக்கிற்கு புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும்.
  • திருவிளக்கு போற்றிகள், லக்ஷ்மி போற்றிகள், லலிதா சகஸ்ரநாமம், காயத்ரி மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்யுங்கள்.

மந்திர பூஜைகள் முடிந்ததும், குத்துவிளக்கிற்கு தீப தூப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.