பஞ்ச புராணம் | Pancha Puranam

பஞ்ச புராணம் | Pancha Puranam

பஞ்ச புராணத்தின் பகுதிகள்

தேவாரங்கள்
(1)
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.

(2)
அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புற
இன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே

(3)
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்பது
வேதம் நான்கினும் மெய்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

(4)
பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

(5)
சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில்பலி கொண்டுழல்வார்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீராட்டான துறை அம்மானே

திருவாசகம்

(6)
பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது நீயே

(7)
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருகிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குத்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
ஏங்கெழுந் தருளுவ தினியே

திருவிசைப்பா
(8)
ஓளிவளர் விளக்கே யுலப்பிலா வொன்றே
உணர்வுசூள் கடந்ததோருணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண் மணிக்குன்றே
சித்தத்துட் தித்திக்கும் தேனே
அளிவளருள்ளத் தானந்தக் கனியே
அம்பல மாடரங் காக
தெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே

(9)
கற்றவர் விழுங்குங் கற்பக கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனை
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னை கண்டுகண்டுள்ளம்
குளிர என் கண் குளிர்தனவே

திருப்புராணம்

(10)
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி

திருப்புகழ்

(11)
ஏறுமயிலேறி விளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே