Arumuga Swami Virutham in Tamil

ஆறுமுக சுவாமி விருத்தம்

அறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும்
அலங்கார ஆபரண மணிந்த மார்பும்
திருமுகமும் வெண்ணீரும் புனைந்த மெய்யும்
ஜெகமெல்லாம் புகழ்படைத்த சுப்ரமண்யா
முருகா சரவணபவனே கார்த்திகேயா
முக்கணனார் புத்திரனே உக்ரவேலா
இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா
இதுசமயம் அடியாரை ரட்சிப்பாயே !

மயிலேறி விளையாடும் சுப்ரமண்யா
வடிவேலா உன்பாதம் நம்பினேனே
உயிரிழந்து அபகீர்த்தியாகும் வேளை
உன்செயலால் இதுசமயம் உயிரைக்காத்தாய்
தயவாக இனிமேலும் உயிரைக் காத்து
சண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய்
வயிபோக மானமலைப் பழநிவேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !

வருந்துமடியார் உயிரைக்காக்குந் தெய்வம்
வையகத்தில் வேறொருவரில்லை யென்று
அறிந்துநான் உனைப்பணிந்தேன் சுப்ரமண்யா
ஆதரித்துப் பிராணபயம் தீருமையா
திரிந்தலைந்து அறுமூன்று திங்களாகச்
சிறையிலிருந்து தøளீப்பூண்டு சின்னமாளேன்
பறந்துவரு மயிலேறும் பழநிவேலா
பண்பாக உயிர்காத்து ரட்சிப்பாயே !

பெருவேங்கைப் புலிபுடித்த பசுவைப்போல
பிதுர்கலங்கி மனம்தளர்ந்து புலம்பினோமே
இருவருமே உனைக்கூவச் செவிகேளாதோ
இதுசமயந் தாமதா யிருக்கலாமோ
குருவாகித் தந்தையாய் நீயேயாகில்
குமரேசா பிராணபயந் தீருமையா
முருகேசா இதுசமயம் பழநிவேலா
முன்வந்து உயிர்காத்து ரட்சிப்பாயே !

பாம்பின்வாய் சிக்கியதோர் தேரை.போல
பதைபதைத்து வாடுகிறோம் பாலர்நாங்கள்
தேம்பியே புலம்புகிறோம் துயரமாகித்
தென்னவனே உன்செவிக்குக் கேளாதோதான்
நான்புவியல் உன்னைநம்பி மகிழ்ந்திருந்தேன்
நாயேனுக்கு அபாயம்வர நியாயமோதான்
சாம்பசிவன் புத்திரனே பழநிவேலா
சமயமிது உயிர்காத்து ரட்சிப்பாயே !

வலைப்பட்ட உயிரதுபோல் மயங்குகின்றோம்
வடிவேலா இதுசமயம் துயரந்தீர்ப்பாய்
கொலைகளவு பாதகங்கள் பொய்களெல்லாம்
கொடும்பழிகள் வஞ்சனைகள் பில்லிசூன்யம்
தொலையாத சிறுபிணிவல் வினைகளெல்லாம்
துரத்துமையா மயிலேறும் சுப்ரமண்யா
மலையிலுறை வாசனே பழநிவேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !

நாகமது கெருடனைக் கண்டலைந்தாற் போல
நான்பயந்து அலைதுரும்பாய் அலைகிறேனே
தாகமது தீருமையா தவிக்கும் வேளை
சண்முகனே இதுசமயம் அடியேனுக்கு
மேகமது பயிர்க்குதவி செய்தாற்போலே
வேலவனே வரவேணும் பழநிவேலா
வினைதீர்த்து உயிர்காத்து ரட்சிப்பாயே !

பூனைகையில் சிக்கியதோர் கிளியைப்போலப்
புலம்புகிறோம் பிராணபயம் மிகவுமாகி
நானடிமை உமைநம்பி யிருக்கும் வேளை
நாயகனே பாராமுகமாய் இருக்கலாமோ
மானீன்ற வள்ளியம்மை தெய்வானை
மணவாளா சரவணனே கருணைசெய்வாய்
கானமயில் வாகனனே பழநிவேலா
கடவுளே உயிர்காத்து ரட்சிப்பாயே !

தூண்டிலகப்பட்ட மீன்போல் துடிக்கிறேனே
சுப்ரமண்யா இதுசமயம் அடியேனுக்கு
வேண்டுவரம் கொடுப்பதற்கு உன்னையன்றி
வேறொருவ ரில்லையென்று நம்பினேனே
மீண்டுவரும் வினையகற்றித் துயரந் தீர்ப்பாய்
வேலவனே சூர சங்காரவேலா
ஆண்டவனே உனைப்பணிந்தேன் பழநிவேலா
அடியார்கள் உயிர்காத்து ரட்சிப்பாயே !

நஞ்சுபட்டு விஷமேறி மயங்குமாப்போல்
நடுநடுங்கிக் கிடுகிடுடென்று பயந்துநாங்கள்
தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் திருத்தணிகை வாசா
சற்குருவே பிராணபயந் தீருமையா
பஞ்சகனைச் சிறைவிடுத்துத் தலையைவாங்கிப்
பாடமெல்லாம் பரிகரித்துப் பதமேதந்தாய் !
வஞ்சனைகள் செய்யாமல் பழநிவேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !

அத்திமுகனே முக்கணனுக்கு இளையவேலா
அறுமுகனே தணிகையிலே அமர்ந்தவாசா
வித்தகத்திற் பேசாத மூடனேனும்
வேலவனே நின்னருளால் கவியைப்போலே
பத்துமே பதிகமாய்ப் பாடிச்சொன்னேன்
என்மீதில் பிழைகள்மனம் பொறுத்தேயாள்வாய்
சத்தியமாய் உனைப்பணிந்தோம் எங்கள் அய்யா
சண்முகனே அடியாரை ரட்சிப்பாயே.