Mahabharatham story in Tamil 102 – மகாபாரதம் கதை பகுதி 102

மகாபாரதம் பகுதி-102

ஒருவர் பிறருக்குத் துன்பம் செய்ய நினைக்கும்போது, அது தன்னையே தாக்கும் என்பதை உணர வேண்டும். அந்த நிலைமையில் தான் அர்ஜுனன் இருந்தான். இப்போது அனைத்து சகோதரர்களின் பார்வையும் கண்ணபிரான் மீது திரும்பின. அவர்கள் அவரைத் திட்டித் தீர்த்தனர். நகுலன் கிருஷ்ணரிடம், ஏ கண்ணா! கம்சனால் அனுப்பப்பட்ட பூதகி யிடம் பால் குடிப்பது போல் நாடகமாகி, அவளது உயிரைக் குடித்த பைத்தியக்காரன் தானே நீ! எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இப்படி செய்திருப்போமா! என்றான். சகாதேவன், இரண்யனையும் அவனது மகன் பிரகலாதனையும் விரோதியாக்கி மகன் மூலமே தந்தையைக் கொன்றாய். ராமனாக வந்து ராவணனுக்கும், அவன் தம்பி விபீஷணனுக்கும் பகையை உண்டாக்கி ராவணனை அழித்தாய். அதுபோல் எங்கள் விரலைக் கொண்டே எங்கள் கண்களைக் குத்தினாய். ஒரு வார்த்தை இவன் உங்களது அண்ணன் என்று சொல்லியிருந்தால் எங்கள் கர்ணன் அண்ணாவை இழந்திருப்போமாஎன்று கதறினான். இப்படியாக, பெரும் சோகத்துடன் அன்றையப் போர் முடிந்தது. துரியோதனன், கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்த சல்லியனை தனது படைத்தலைவனாக நியமித்தான். சல்லியனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இன்றோடு பாண்டவர்களை அழித்து போரை முடிப்பேன் என சபதம் செய்தான். பாண்டவர் தரப்பில் பீமன் களத்தில் புகுந்தான். துரியோதனனை கொன்றே தீர வேண்டும் என்பது அவனது அன்றைய சபதம். தர்மர் எதிர்தரப்பு அணிவகுப்பைக் கண்டு அதிசயித்து, இந்த வியூகத்தை அளவில் குறைந்த நமது சேனை எப்படி வெல்ல முடியும்? என்று கிருஷ்ணரிடம் கேட்டார்.
கிருஷ்ணர் சிரித்தார்.

தர்மரே! நல்ல கேள்வி கேட்டீர். பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற வீராதிவீரர் களை ஜெயித்த நீர், சல்லியனைப் பார்த்து பயப்படுகிறீரே! இந்தப் படையின் உதவியுடன் தானே அவர்களைக் கொன்றீர்! முதலில் உமது படை மீது நம்பிக்கை கொள்ளும். சல்லியன் திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. உமது தம்பிகளை விட வலிமையானவன். அவனை ஜெயிக்க உங்களால் முடியாது என்பது நிஜம். ஆனால், நான் சொல்வதைப் போல செய்ய வேண்டும். மாவீரன் அஸ்வத்தாமனுடன் அர்ஜுனன் போர் செய்ய வேண்டும். சகாதேவன் சகுனியுடன் மோத வேண்டும். நகுலன் கர்ணனின் பிள்ளைகளுடன் போரிட வேண்டும். நீயும் பீமனும் இணைந்தால் சல்லியனைக் கொன்று விடலாம். இது நிச்சயம், என்றார்.கண்ணபிரான் சொன்னால் அதற்கு மறுபேச்சு ஏது? அது அப்படியே நடந்து விடுமே.போர் தொடங்கியது. கிருஷ்ணர் வகுத்த வியூகப்படி அவரவருக்குரிய வீரர்களுடன் பாண்டவர்கள் மோதினர். கர்ணனின் புத்திரர்களான சித்திரசேனன், சூரியவர்மன், சித்திரகீர்த்தி ஆகியோரை நகுலன் கொன்றான். சகுனியையும், அவனது புத்திரர்களான உலுõகன், சைந்தவனை சகாதேவன் விரட்டியடித்தான். இந்நேரத்தில் பீமனும், சல்லியனும் சமஅளவு பலத்துடன் மோதினர். நகுலனும், சகாதேவனும் பீமனுடன் சேர்ந்து சல்லியனைத் தாக்கினர். சல்லியனோ எதற்கும் அஞ்சவில்லை. மூவர் மீதும் பாணங்களை எய்தான். அவர்கள் தளர்ந்து போனது கண்டு ஏளனமாக சிரித்தான். இதுகண்டு ஆத்திரமடைந்த பீமன், சல்லியனைச் சுற்றி பாதுகாப்பாக நின்ற பலநாட்டு அரசர் களைக் கொன்று குவித்தான். சல்லியன் இப்போது பலமிழந்து நின்றான். இதற்குள் அஸ்வத்தாமனை புறமுதுகிட்டு ஓடச்செய்த அர்ஜுனனும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

தர்மர் அவர் களையெல்லாம் விலக்கிவிட்டு, ஒருவனுக்கு ஒருவன் என்ற ரீதியில் சல்லியனுடன் போரிட்டார். கடும் கோபத்துடன் வேல் ஒன்றை எடுத்து வீசினார். அந்த வேல் சல்லியனின் தலையைத் துண்டித்தது. சல்லியன் இறந்ததும், வருத்தமடைந்த துரியோதனன் தன் படையுடன் தர்மருடன் மோதினான். அவனுடன் ஜயகந்தன், ஜயவர்மா, ஜயத்ரதன், ஜயவிந்து, ஜய விக்ரமன், ஜயசேனன், சேநாவிந்து ஆகியோர் வந்தனர். அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தான் பீமன். தம்பியரை தன் கண் முன்னாலேயே இழந்த துரியோதனன் அடைந்த சோகத்திற்கு அளவேயில்லை.பின்னர், ஜயசூரன், பலசேனன், சித்ரவாகு, சித்திரன், உத்தமவிந்து என்ற துரியோதனனின் தம்பிகள் அவனுடன் இணைந்தனர். அவர்களையும் மிக வேகமாக சொர்க்கத்தை தழுவ வைத்தான் பீமன். ஒரே நேரத்தில் 12 சகோதரர் களை பறிகொடுத்தால் என்னாகும்? துரியோதனன் மேலும் மனம் தளர்ந்தான். இதையடுத்து உத்தமன், உதயபானு, பலவர்மா, கீர்த்தி, பிரபலநாதன், சீலன், சுசீலன், விக்ரமபாகு, பலபீமன் என்ற ஒன்பது தம்பிமார்கள் களத்தில் புகுந்தனர். அவர்களை ஒரு வினாடி நேரத்தில் பீமன் விண்ணுலகம் அனுப்பிவிட்டான்.
இப்படி பீமனின் பராக்கிரமத்தை பார்த்து போர்க்களத்திலுள்ள இருதரப்பினருமே ஆச்சரியப்பட்டனர். கிருஷ்ணர் அவனை மனதுக்குள் வெகுவாகப் பாராட்டினார். இதுகண்டு எஞ்சிய மற்ற சகோதரர்கள் பீமனுடன் ஒன்றாக இணைந்து போருக்கு வர, அவர்களும் அழிக்கப்பட்டனர். கவுரவர் என்ற வம்சமே அன்று அழிந்தது துரியோதனனைத் தவிர! துரியோதனன் இதைப் பார்த்து அழுதே விட்டான். அழுதென்ன பலன்! வம்பு செய்பவனுக்கும், பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவனுக்கும், அண்ணி என்றும் பாராமல் பெற்றவளுக்கு சமமான பெண்ணை அவமானப்படுத்தியதற்கும் தண்டனை அனுபவித்து தானே ஆக வேண்டும்! அவன் சோர்ந்து நின்ற வேளையில். இத்தனைக்கும் மூல காரணமான பாழாய்ப் போன சகுனி,துரியோதனனிடம் வந்தான்.

மருமகனே! கவலை கொள்ளாதே. போர்க்களத்தில் இது சகஜம். நீ நீடுழி வாழ வேண்டுமானால், நான் சொல்வதைக் கேட்க வேண்டும். நம்மீடம் கிருதவர்மா, கிருபாச்சாரியார் போன்ற வீரர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் வலிமையில் குறைந்தவர்களா என்ன! நானும் வருகிறேன். நாம் எல்லாருமாக தர்மரைத் தாக்குவோம், என்றான்.அந்தக் கொடியவனின் பேச்சைக் கேட்டு, ஏற்கனவே சூதாட்டம் என்ற கொடிய விளையாட்டுக்கு சம்மதித்த துரியோதனன், இதற்கும் சம்மதித்தான்