Mahabharatham story in Tamil 68 – மகாபாரதம் கதை பகுதி 68

மகாபாரதம் – பகுதி 68

கர்ணா! உன் பிறப்பு அதிசயமானது என்று துவங்கிய கிருஷ்ணர், அவன் பிறந்த கதை, வளர்ந்த கதையை எடுத்துச் சொன்னதும், கர்ணனின் முகம் வாடித்தான் போனது, ராஜமாதா குந்திதேவியா தன்னைப் பெற்றெடுத்தவள், பாண்டவர்கள் என் உடன் பிறந்த சகோதரர்களா! என் தந்தை சூரிய பகவானா? இப்படி பல சிந்தனைகளுக்கு மத்தியில், தான் ஏன் பிறந்தோம்? என்று உணர்வுப் பிழம்பானான். உணர்வுகளும், கவலைகளும் தாக்கினாலும் கூட மனிதன் தன்னிலையில் இருந்து மாறிவிடக் கூடாது என்பதற்கு கர்ணன் நல்ல உதாரணம். ஒரு சாதாரண மனநிலையுள்ளவன் இந்நேரம் என்ன செய்திருப்பான்? நண்பா! என் தாய் குந்தி. தம்பிகள் பாண்டவர்கள். அவர்களை நான் என்ன செய்ய முடியும்? இனி, உன் கூட இருந்தால் உலகம் ஒப்புமா? நம் நட்பு நீடிக்க வேண்டுமானால், என் தம்பிகளின் ராஜ்யத்தைக் கொடுத்து விடு என்று தானே கேட்டிருப்பான்.

கர்ணன் குழம்பினான், தளர்ந்தான். ஆனாலும், நிலை தடுமாறவில்லை. கண்ணா! நீ சொன்னதால், என் பிறப்பின் தன்மையை அறிந்தேன். ஆனால், அதற்காக துரியோதனனை விட்டு எப்படி நான் விலக முடியும்? அப்படி செய்தால், இன்று புதுஉறவு கிடைத்து விட்டது என்பதற்காக, நான் அவனை விட்டு விலகி விட்டதாக உலகம் பழிதூற்றுமே! நான் யார் என்றே கண்டுகொள்ளாமல், அங்கதேசத்தை எனக்கு தந்து அதற்கு என்னை ராஜாவாக்கினானே! அந்த உத்தம நண்பனுக்கு நான் துரோகம் செய்யலாமா? குறிப்பாக, இப்போது இருதரப்புக்கும் போர் உறுதியாகி விட்ட நிலையில் பிரியலாமா? கஷ்டம் வரும் நேரத்தில் கைகொடுப்பவன் தானே நண்பன்? சொல் பரந்தாமா!.


கிருஷ்ணர் கர்ணனை உற்றுப் பார்த்தார். எவ்வளவு உத்தமமானவன் இந்த கர்ணன். பாண்டவர்களுடன் இணைந்தால், துரியோதனனை அந்த சமயமே கொன்று, அவனது நாட்டையும் சேர்த்து சொந்தமாக்கிக் கொள் ளலாம். மூத்தவன் என்ற முறையில் தானே பட்டம் சூட்டிக் கொள்ளலாம். இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும், அதை ஒதுக்கித் தள்ளி நட்புக்கு முக்கியத்துவம் தருகிறானே இந்த கொடை வள்ளல். இந்த உயர்ந்த மனப்பான்மை யாருக்கு வரும்? ஐயோ! கர்ணா! ஆனால், உன் விதி இப்படியா இருக்க வேண்டும்.

ஒருவன் எவ்வளவு உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தவன் ஆயினும், அவன் தீயவர்களுடன் பழக்கம் கொண்டால், தன்னையே காவு கொடுக்கும் நிலை வந்து விடுகிறதே! கர்ணா! உன் கதை உலகுக்கு ஒரு பாடம். நல்லவர்கள் தீயவர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவே கூடாது, என மனதில் நினைத்தவராய், அந்த மாமனிதனிடம் எதுவுமே பதில் சொல்லாமல், கர்ணனைக் குழப்ப வேண்டுமென்ற தன் கடமை முடிந்து விட்ட நிலையில் புறப்பட்டு விட்டார். நேரே அவர் துரியோதனனின் அரசவைக்குச் சென்றார். அங்கே, துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இருந்தான். துரியோதனின் படையில் கர்ணன் வலது கை என்றால், அஸ்வத் தாமன் இடது கை. அவன் மாவீரன். எந்தக் கை இல்லாவிட்டாலும் மனிதனுக்கு சிரமம்தான். அஸ்வத் தாமனை வைத்து ஒரு குழப்பத்தை நடத்த கண்ணன் திட்டமிட்டார்.


அவர் ராஜசபையில் இருந்த அஸ்வத்தாமனை தனியே அழைத்தார். அஸ்வத்தாமா! நீ பரிசுத்தமானவன். உன் வாயில் உண்மை ஒன்றே வரும். பாண்டவர்கள் என்னிடம் சொல்லி அனுப்பியபடி, துரியோதனனிடம், அவர்களின் நாட்டைக் கேட்டேன். மறுத்துவிட்டான். ஆளுக்கு ஒன்றாக ஐந்து ஊர்களையாவது கேட்டேன். அதற்கும் மறுத்தான். இதற்கு நீயே சாட்சி. அது மட்டுமல்ல! என் வேண்டுகோள் ஒன்றைக் கேள். துரியோதனன், உன்னை அவனது படைக்கு சேனாதிபதியாக்கும் எண்ணம் கொண்டுள்ளான். அதற்கு நீ மறுத்து விடு.

ஏனெனில், பாண்டவர்கள் மீது நீயும் அன்பு கொண்டவன் என்பதை நான் அறிவேன். நீ சேனாதிபதியாக இருந்தால் பாண்டவர்கள் உன்னை வெல்வது சிரமமே! என்றவர், தற்செயலாக தன் மோதிரத்தை நழுவ விட்டார். அஸ்வத்தாமன் குனிந்து அதை எடுத்து, அவரிடம் நீட்டிய சமயத்தில், அஸ்வத்தாமா! இதென்ன அதிசயம்! வானத்தைப் பார். சூரி யனை திடீரென ஏதோ இருள் சூழ்ந்தது போல் தெரிகிறதே என்றார். அப்போது, ராஜ சபையில் இருந்த எல்லாருக்கும் எல்லாமே மங்கலாகத் தான் தெரிந்தது. இந்நேரத்தில், மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட கண்ணன், அஸ்வத்தாமா! நீ போகலாம், என்றார். இதைப் பார்த்த துரியோதனனுக்கு கடும் கோபம் வந்துவிட்டது.

அவையறிய அவன், இந்த அஸ்வத்தாமன், கண்ணன் கொடுத்த மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு, ஏதோ சத்தியம் செய்து கொடுத்து விட்டான். என்னிடமிருந்து இவனை கண்ணன் பிரித்து விட்டான். அதற்கு இவனும் துணை போய்விட்டான், என்றான். அஸ்வத்தாமன் மிகுந்த வருத்தமடைந்தான். இதை அவையில் இருந்த மற்றவர் களும் ஒப்புக்கொள்ள வேண்டியே இருந்தது. ஏனெனில், நடந்த சூழ்நிலை அப்படி. அவன் விளக்கம் சொல்ல வாயெடுத்தான். இதற்குள், சூரியனைப் பிடித்திருந்த இருள் அகல, ஒளிவெள்ளம் பாய்ந்தது. அஸ்வத்தாமா! நாம் தனித்துப் பேசுவதைப் பார்த்து அவையில் இருப்பவர்கள் சந்தேகப்படுவது போல் தெரிகிறது. நீ போய்விடு, என்ற கண்ணன், காரியம் முடிந்த சந்தோஷத்தில் கிளம்பி விட்டார்.

இவ்விடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். ஒருவனின் சொந்த இடத்தை நாடாள்பவனே பறித்துக் கொள்கிறான். அவளது மனைவியைத் துன்புறுத்துகிறான். ஊரை விட்டே விரட்டுகிறான். இது தர்மத்துக்கு புறம்பானது. இதுபற்றி பாதிக்கப்பட்டவன் கடவுளிடம் முறையிடுகிறான். கடவுள் அவனுக்கு மனமிறங்கி உதவி செய்ய வருகிறார். தர்மத்தைக் காப்பாற்ற சில தகிடு தத்தங்களைச் செய்கிறார்.

பாண்டவர்கள் விஷயமும் இப்படியே. அவர்கள் நாடிழந்தார்கள். பாஞ்சாலி துயிலுரியப்பட்டாள். காட்டுக்கு விரட்டப்பட்டார்கள். பரமாத்மா, கண்ணனாக வேறொரு காரியத்துக்காக பூமிக்கு வந்தவர், இவர்களின் வேண்டுதலைக் கேட்கிறார். தர்மத்தைக் காக்க இந்த தகிடுதத்த வேலைகளைச் செய்கிறார். மனிதனுக்கு மனிதன் துரோகம் செய்வது இயற்கையே. துரியோதனனும், பாண்டவர்களும் மனிதர்கள். அவர்களுக்குள் பிரச்னை எழுந்தது இயற்கையே. கடவுளாகிய கண்ணன், இப்படி செய்யலாமா என்ற கேள்வி தான் உங்களுக்குள் எழுந்திருப்பது. சரி…அவர் ஏன் இப்படி செய்தார்?