- அடியார் வணக்கம்
வெம்பந்தந் தீர்த்துலகாள் வேந்தன் திருஞான
சம்பந் தனையருளாற் சாருநாள் எந்நாளோ. 1.
ஏரின் சிவபோகம் இங்கிவற்கே என்னஉழ
வாரங்கொள் செங்கையர்தாள் வாரம்வைப்ப தெந்நாளே. 2.
பித்தரிறை என்றறிந்து பேதைபால் தூதனுப்பு
வித்த தமிழ்ச்சமர்த்தர் மெய்புகழ்வ தெந்நாளோ. 3.
போதவூர் நாடறியப் புத்தர்தமை வாதில்வென்ற
வாதவூர் ஐயன்அன்பை வாஞ்சிப்ப தெந்நாளோ. 4.
ஓட்டுடன்பற் றின்றி உலகைத் துறந்தசெல்வப்
பட்டினத்தார் பத்ரகிரி பண்புணர்வ தெந்நாளோ. 5.
கண்டதுபொய் என்றகண்டா காரசிவம் மெய்யெனவே
விண்டசிவ வாக்கியர்தாள் மேவுநாள் எந்நாளோ. 6.
சக்கர வர்த்தி தவராச யோகியெனும்
மிக்கதிரு மூலன்அருள் மேவுநாள் எந்நாளோ. 7.
கந்தரநு பூதிபெற்றுக் கந்தரநு பூதிசொன்ன
எந்தைஅருள் நாடி இருக்குநாள் எந்நாளோ. 8.
எண்ணரிய சித்தர் இமையோர் முதலான்
பண்ணவர்கள் பத்தரருள் பாலிப்ப தெந்நாளோ. 9.