அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | Ashta Aishwarya Pathigam

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | செல்வம் அருளும் அற்புதப் பதிகம் | Ashta Aishwarya Pathigam

‘பொருள் இல்லார்க்கு அருள் இல்லை’ என்பது அனுபவ மொழி. செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும். கண்ணன் அருளால் கிடைக்கப்பெற்ற செல்வத்தை நல்லபடி பயன்படுத்தாத காரணத்தால்தான் குசேலன் காலடியில் அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கவும், ஆதிசங்கரரின் அருளால் ஏழ்மை விலகவும் நேர்ந்தது. அப்படி நமக்கு செல்வத்தை அருளக்கூடியதும், செல்வம் நிலைத்திருக்கச் செய்யவும் இந்தப் மந்திரத்தை தினமும் காலையில் குளித்து, நெற்றியில் திருநீறு அணிந்து, சிவபெருமானை தியானித்து இந்த மந்திரம் பாராயணம் செய்தால், நிச்சயம் செல்வம் பெற்று சிறப்புற வாழலாம். பலரும் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மை இது.

அத்தகைய அஷ்ட ஐஸ்வர்யங்களையும் செல்வத்தையும் அருளும் இந்தப் பதிகத்தை அருளியவர் திருஞானசம்பந்தர். அவர் எந்தச் சூழ்நிலையில் இந்தப் பதிகத்தைப் பாடினார் என்பதைப் பற்றி முதலில் அறிந்து கொள்வோம்.

சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர், இறைவன் அருளால் சிவபக்தியில் சிறந்து ஒவ்வொரு தலமாகச் சென்று சிவபெருமானை தேன் தமிழ்ப் பாடல்களால் போற்றி வழிபட்டு வந்தார். அப்படி அவர் திருவாவடுதுறை தலத்துக்கு வந்திருந்தபோது, சீர்காழியில் இருந்த அவருடைய தந்தை சிவபாதஇருதயருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.

அந்த சோதனை-

அந்தக் காலத்தில் வேதியராகப் பிறந்தவர்களுக்கு உரிய காலங்களில் வேதங்கள் வகுத்த நெறிமுறைகளின்படி வேள்விகளைத் தவறாமல் செய்யவேண்டும் என்று விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் சிவபாதஇருதயரும் வேள்வி செய்யவேண்டிய காலம் வந்தது. ஆனால், அதற்குத் தேவையான செல்வம் அவரிடம் இல்லை.

சிவபாதருக்கு செல்வம் இல்லாத சிக்கல் என்றால், ஞானசம்பந்தருக்கு தந்தைக்கு செய்யவேண்டிய கடமையில் இருந்து தவறிவிட்ட தர்மசங்கடமான நிலை. உள்ள நிலைமை திருஞானசம்பந்தருக்கு புரிந்தது. ஈசனின் அருளை வேண்டி, ‘இடரினும் தளரினும்’ என்ற பதிகத்தைப் பாடினார்.

பதிகம் பாடி முடித்ததும், சிவபெருமானின் ஆணைப்படி சிவபூதம் ஒன்று தோன்றி, அங்கிருந்த பீடத்தின்மேல் ஆயிரம் பொன் கொண்ட ஒரு பாத்திரத்தை வைத்து, ”உமக்கு ஈசன் அளித்த இந்தப் பொற்கிழி உலவா பொற்கிழியாகும். இதில் எடுக்க எடுக்க வளருமே தவிர, குறையாது” என்று சொல்லி மறைந்தது. சிவபெருமானின் அருளால் தான் பெற்ற செல்வத்தை தந்தைக்கு அனுப்பி, ”இதில் உள்ள பொற்காசுகள் எடுக்க எடுக்க குறையாமல் வளரும். இதை உங்கள் வேள்விக்கு மட்டுமல்லாமல், சீர்காழிப் பதியில் உள்ள அனைத்து வேதியர்களும் வேள்வி செய்யப் பயன்படட்டும்” என்று கூறி அனுப்பினார்.

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கி வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றப் போதணிந்த
கனலெரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென் நா
கைம்மல்கு வரிசிலைகி கனை ஒன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்

அப்பாவுன் அடியலால் அரற்றாதென் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படிஅழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே.

பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
சீருடைக் கழலலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாதென் நா
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றாமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன்னடி யலால் அரற்றாதென் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்பட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநனை வேற்படை எம்மிறையை
நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன
விலையுடை அருந் தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே.