Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: மாதர் மயக்கருத்தல்

  1. மாதர் மயக்கருத்தல்

மெய்வீசு நாற்றமெலாம் மிக்கமஞ்ச ளால்மறைத்துப்
பொய்வீசும் வாயார் புலையொழிவ தெந்நாளோ. 1.

திண்ணியநெஞ் சப்பறவை சிக்கக் குழற்காட்டில்
கண்ணிவைப்போர் மாயங் கடக்குநாள் எந்நாளோ. 2.

கண்டுமொழி பேசிமனங் கண்டுகொண்டு கைவிலையாக்
கொண்டுவிடு மானார்பொய்க் கூத்தொழிவ தெந்நாளோ. 3.

காமனைவா வென்றிருண்ட கண்வலையை வீசும்மின்னார்
நாமம் மறந்தருளை நண்ணுநாள் எந்நாளோ. 4.

கண்களில்வெண் பீளை கரப்பக் கருமையிட்ட
பெண்கள்மயல் தப்பிப் பிழைக்குநாள் எந்நாளோ. 5.

வீங்கித் தளர்ந்து விழுமுலையார் மேல்வீழ்ந்து
தூங்குமதன் சோம்பைத் துடைக்குநாள் எந்நாளோ. 6.

கச்சிருக்குங் கொங்கை கரும்பிருக்கும் இன்மாற்றம்
வைச்சிருக்கும் மாதர் மயக்கொழிவ தெந்நாளோ. 7.

பச்சென்ற கொங்கைப் பரப்பியர்பா ழானமயல்
நச்சென் றறிந்தருளை நண்ணுநாள் எந்நாளோ. 8.

உந்திச் சுழியால் உளத்தைச் சுழித்தகன
தந்தித் தனத்தார் தமைமறப்ப தெந்நாளோ. 9.

தட்டுவைத்த சேலைக் கொய்சகத்திற் சிந்தைஎல்லாங்
கட்டிவைக்கும் மாயமின்னார் கட்டழிவ தெந்நாளோ. 10.

ஆழாழி என்ன அளவுபடா வஞ்சநெஞ்சப்
பாழான மாதர்மயல் பற்றொழிவ தெந்நாளோ. 11.

தூயபனித் திங்கள் சுடுவதெனப் பித்தேற்றும்
மாய மடவார் மயக்கொழிவ தெந்நாளோ. 12.

ஏழைக் குறும்புசெய்யும் ஏந்திழையார் மோகமெனும்
பாழைக் கடந்து பயிராவ தெந்நாளோ. 13.

விண்டு மொழிகுளறி வேட்கைமது மொண்டுதருந்
தொண்டியர்கள் கட்கடையிற் சுற்றொழிவ தெந்நாளோ. 14.

மெய்யிற் சிவம்பிறக்க மேவும்இன்பம் போல்மாதர்
பொய்யிலின் பின்றென்று பொருந்தாநாள் எந்நாளோ. 15.