Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: தத்துவ முறைமை

  1. தத்துவ முறைமை

ஐம்பூதத் தாலே அலக்கழிந்த தோடமற
எம்பூத நாதனருள் எய்துநாள் எந்நாளோ. 1.

சத்தமுத லாம்புலனிற் சஞ்சரித்த கள்வரெனும்
பித்தர்பயந் தீர்ந்து பிழைக்குநாள் எந்நாளோ. 2.

நாளும் பொறிவழியை நாடாத வண்ணம்எமை
ஆளும் பொறியால் அருள்வருவ தெந்நாளோ. 3.

வாக்காதி யானகன்ம மாயைதம்பால் வீண்காலம்
போக்காமல் உண்மை பொருந்துநாள் எந்நாளோ. 4.

மனமான வானரக்கைம் மாலையாக் காமல்
எனையாள் அடிகளடி எய்துநாள் எந்நாளோ. 5.

வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணமனக்
காட்டைத் திருத்திக் கரைகாண்ப தெந்நாளோ. 6.

உந்து பிறப்பிறப்பை உற்றுவிடா தெந்தையருள்
வந்து பிறக்க மனமிறப்ப தெந்நாளோ. 7.

புத்திஎனுந் துத்திப் பொறியரவின் வாய்த்தேரை
ஒத்துவிடா தெந்தையருள் ஓங்குநாள் எந்நாளோ. 8.

ஆங்கார மென்னுமத யானைவா யிற்கரும்பாய்
ஏங்காமல் எந்தையருள் எய்துநாள் எந்நாளோ. 9.

சித்தமெனும் பௌவத் திரைக்கடலில் வாழ்துரும்பாய்
நித்தமலை யாதருளில் நிற்குநாள் எந்நாளோ. 10.

வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டோடச்
சுத்தபர போகத்தைத் துய்க்குநாள் எந்நாளோ. 11.

சுத்தவித்தை யேமுதலாத் தோன்றுமோர் ஐந்துவகைத்
தத்துவத்தை நீங்கிஅருள் சாருநாள் எந்நாளோ. 12.

பொல்லாத காமப் புலைத்தொழிலில் என்னறிவு
செல்லாமல் நன்னெறியிற் சேருநாள் எந்நாளோ. 13.

அடிகளடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணங்
குடிகெடுக்கும் பாழ்மடிமைக் கூறொழிவ தெந்நாளோ. 14.

ஆன புறவிக்கருவி ஆறுபத்தும் மற்றுளவும்
போனவழி யுங்கூடப் புல்முளைப்ப தெந்நாளோ. 15.

அந்தகனுக் கெங்கும்இரு ளானவா றாஅறிவில்
வந்தஇருள் வேலை வடியுநாள் எந்நாளோ. 16.

புன்மலத்தைச் சேர்ந்துமல போதம் பொருந்துதல்போய்
நின்மலத்தைச் சேர்ந்துமல நீங்குநாள் எந்நாளோ. 17.

கண்டுகண்டுந் தேறாக் கலக்கமெல்லாந் தீர்வண்ணம்
பண்டைவினை வேரைப் பறிக்குநாள் எந்நாளோ. 18.

பைங்கூழ் வினைதான் படுசாவி யாகஎமக்
கெங்கோன் கிரணவெயில் எய்துநாள் எந்நாளோ. 19.

குறித்தவித மாதியாற் கூடும்வினை எல்லாம்
வறுத்தவித்தாம் வண்ணம்அருள் வந்திடுநாள் எந்நாளோ. 20.

சஞ்சிதமே யாதி சரக்கான முச்சேறும்
வெந்தபொரி யாகஅருள் மேவுநாள் எந்நாளோ. 21.

தேகமுதல் நான்காத் திரண்டொன்றாய் நின்றிலகும்
மோகமிகு மாயை முடியுநாள் எந்நாளோ. 22.

சத்த முதலாத் தழைத்திங் கெமக்குணர்த்துஞ்
சுத்தமா மாயை தொடக்கறுவ தெந்நாளோ. 23.

எம்மை வினையை இறையைஎம்பாற் காட்டாத
அம்மை திரோதை அகலுநாள் எந்நாளோ. 24.

நித்திரையாய் வந்து நினைவழிக்குங் கேவலமாஞ்
சத்துருவை வெல்லுஞ் சமர்த்தறிவ எந்நாளோ. 25.

சன்னல்பின்ன லான சகலமெனும் குப்பையிடை
முன்னவன்ஞா னக்கனலை மூட்டுநாள் எந்நாளோ. 26.

மாயா விகார மலமொழிசுத் தாவத்தை
தோயா அருளைத் தொடருநாள் எந்நாளோ. 27.