Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: குமரமரபின் வணக்கம்

  1. குமரமரபின் வணக்கம்

துய்ய கரமலரால் சொல்லாமல் சொன்னவுண்மை
ஐயனைக்கல் லால்அரசை யாமணைவ தெந்நாளோ. 1.

சிந்தையினுக் கெட்டாத சிற்சுகத்தைக் காட்டவல்ல
நந்தியடிக் கீழ்க்குடியாய் நாமணைவ தெந்நாளோ. 2.

எந்தை சனற்குமர னாதிஎமை ஆட்கொள்வான்
வந்த தவத்தினரை வாழ்த்துநாள் எந்நாளோ. 3.

பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித
மெய்கண்ட நாதன்அருள் மேவுநாள் எந்நாளோ. 4.

பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகவுண்மை
சாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ. 5.

சிற்றம் பலமன்னுஞ் சின்மயராந் தில்லைநகர்க்
கொற்றங் குடிமுதலைக் கூறுநாள் எந்நாளோ. 6.

குறைவிலருள் ஞானமுதல் கொற்றங் குடியடிகள்
நறைமலர்த்தாட் கன்புபெற்று நாமிருப்ப தெந்நாளோ. 7.

நாளவங்கள் போகாமல் நன்னெறியைக் காட்டிஎமை
ஆளவந்த கோலங்கட் கன்புவைப்ப தெந்நாளோ. 8.

என்னறிவை உள்ளடக்கி என்போல் வருமவுனி
தன்னறிவுக் குள்ளேநான் சாருநாள் எந்நாளோ. 9.

ஆறுளன்றை நாடின்அதற் காறுமுண்டா மென்றெமக்குக்
கூறும் மவுனியருள் கூடுநாள் எந்நாளோ. 10.

நில்லாமல் நின்றருளை நேரேபா ரென்றவொரு
சொல்லால் மவுனியருள் தோற்றுநாள் எந்நாளோ. 11.

வைதிகமாஞ் சைவ மவுனிமவு னத்தளித்த
மெய்திகழ்ந்தென் அல்லல் விடியுநாள் எந்நாளோ. 12.

வாக்குமன மற்ற மவுனிமவு னத்தருளே
தாக்கவும்என் அல்லலெல்லாந் தட்டழிவ தெந்நாளோ. 13.