Thayumanavar Songs – எந்நாள்கண்ணி – தெய்வ வணக்கம்

  1. எந்நாள்கண்ணி
  1. தெய்வ வணக்கம்

நீர்பூத்த வேணி நிலவெறிப்ப மனறாடுங்
கார்பூத்த கண்டனையான் காணுநாள் எந்நாளோ. 1.

பொன்னாரும் மன்றுள்மணிப் பூவைவிழி வண்டுசுற்றும்
என்னா ரமுதின்நலன் இச்சிப்ப தெந்நாளோ. 2.

நீக்கிமலக் கட்டறுத்து நேரே வெளியிலெம்மைத்
தூக்கிவைக்குந் தாளைத் தொழுதிடிநாள் எந்நாளோ. 3.

கருமுகங்காட் டாமல்என்றுங் கர்ப்பூரம் வீசுந்
திருமுகமே நோக்கித் திருக்கறுப்ப தெந்நாளோ. 4.

வெஞ்சே லெனும்விழியார் வேட்கைநஞ்சுக் கஞ்சினரை
அஞ்சேல் எனுங்கைக் கபயமென்ப தெந்நாளோ. 5.

ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்றிலங்கும்
வீறு பரைதிருத்தாள் மேவுநாள் எந்நாளோ. 6.

பச்சைநிற மாய்ச்சிவந்த பாகங் கலந்துவகை
இச்சையுடன் ஈன்றாளை யாங்காண்ப தெந்நாளோ. 7.

ஆதியந்தங் காட்டா தகண்டிதமாய் நின்றுணர்த்தும்
போதவடி வாம்அடியைப் போற்றுநாள் எந்நாளோ. 8.

கங்கை நிலவுசடைக் காட்டானைத் தந்தையெனும்
புங்கவெண்கோட் டானைபதம் புந்திவைப்ப தெந்நாளோ. 9.

அஞ்சமுகங் காட்டாமல் ஆறுமுகங் காட்டவந்த
செஞ்சரணச் சேவடியைச் சிந்தைவைப்ப தெந்நாளோ. 10.

தந்தைஇரு தாள்துணித்துத் தம்பிரான் தாள்சேர்ந்த
எந்தைஇரு தாளிணைக்கே இன்புறுவ தெந்நாளோ. 11.