Thayumanavar Songs – மலைவளர்காதலி

  1. மலைவளர்காதலி

பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்
பக்கமுண் டெக்காலமும்
பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம
படரெனுந் திமிர மணுகாக்

கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு
காயசித் திகளுமுண்டு
கறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில்
கருத்தொன்றும் உண்டாகுமேல்

நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர
ஞானஆ னந்தஒளியே
நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே
நானெனும் அகந்தைதீர்த்தென்

மதியுண்ட மதியான மதிவதன வல்லியே
மதுசூ தனன்தங்கையே
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே. 1.

தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
சிற்றிடையி லேநடையிலே
சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
சிறுபிறை நுதற்கீற்றிலே

பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்த
பொடியிலே அடியிலேமேல்
பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
புந்திதனை நுழைய விட்டு

நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே
நின்னடியர் கூட்டத்திலே
நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான
ஞேயத்தி லேயுன்இருதாள்

மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ
வளமருவு தேவை அரசே
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே. 2.

பூதமுத லாகவே நாதபரி யந்தமும்
பொய்யென் றெனைக்காட்டிஎன்
போதத்தின் நடுவாகி அடியீறும் இல்லாத
போகபூ ரணவெளிக்குள்

ஏதுமற நில்லென் றுபாயமா வைத்துநினை
எல்லாஞ்செய் வல்லசித்தாம்
இன்பவுரு வைத்தந்த அன்னையே நின்னையே
எளியேன் மறந்துய்வனோ

வேதமுத லானநல் லாகமத் தன்மையை
விளக்கும்உள் கண்இலார்க்கும்
மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
வீறுவா தம்புகலுவாய்

வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
மாமருந் துக்கமிர்தமே
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே. 3.

மீடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலமெனவும்
மெய்யெலாம் உள்ளுடைந்து
வீறிட்ட செல்வர்தந் தலைவாயில் வாசமாய்
வேதனைக ளுறவேதனுந்

துடியிட்ட வெவ்வினையை ஏவினான் பாவிநான்
தொடரிட்ட தொழில்க ளெல்லாந்
துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன
தொண்டர்பணி செய்வதென்றோ

அடியிட்ட செந்தமிழின் அருமையிட் டாரூரில்
அரிவையோர் பரவைவாயில்
அம்மட்டும் அடியிட்டு நடைநடந் தருளடிகள்
அடியீது முடியீதென

வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே
வளமருவு தேவைஅரசே
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே. 4.

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகி த்ரியம்பகிஎழில்
புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
புஷ்பமிசை வீற்றிருக்கும்

நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சத்திஎன்றுன்
நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே
நானுச்ச ரிக்கவசமோ

ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
அகிலாண்ட கோடிஈன்ற
அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
ஆனந்த ரூபமயிலே

வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவைஅரசே
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே. 5.

பாகமோ பெறஉனைப் பாடஅறி யேன்மல
பரிபாகம் வரவும்மனதில்
பண்புமோ சற்றுமிலை நியமமோ செய்திடப்
பாவியேன் பாபரூப

தேகமோ திடமில்லை ஞானமோ கனவிலுஞ்
சிந்தியேன் பேரின்பமோ
சேரஎன் றாற்கள்ள மனதுமோ மெத்தவுஞ்
சிந்திக்கு தென்செய்குவேன்

மோகமோ மதமோ குரோதமோ லோபமோ
முற்றுமாற் சரியமோதான்
முறியிட் டெனைக்கொள்ளும் நிதியமோ தேடஎனின்
மூசுவரி வண்டுபோல

மாகமோ டவும்வல்லன் எனையாள வல்லையோ
வளமருவு தேவைஅரசே
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே. 6.

தூளேறு தூசுபோல் வினையேறு மெய்யெனுந்
தொக்கினுட் சிக்கிநாளுஞ்
சுழலேறு காற்றினிடை அழலேறு பஞ்செனச்
சூறையிட் டறிவைஎல்லாம்

நாளேற நாளேற வார்த்திக மெனுங்கூற்றின்
நட்பேற உள்ளுடைந்து
நயனங்கள் அற்றதோர் ஊரேறு போலவே
நானிலந் தனில் அலையவோ

வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று
விரையேறு மாலைசூடி
விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற
வெருட்டிய கருங்கூந்தலாய்

வாளேறு கண்ணியே விடையேறும் எம்பிரான்
மனதுக் கிசைந்தமயிலே
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே. 7.

பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள்
புந்திமுத லானபேய்கள்
போராடு கோபாதி ராட்சசப் பேய்களென்
போதத்தை யூடழித்து

வேதனை வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன்
விதித்தானிவ் வல்லலெல்லாம்
வீழும் படிக்குனது மவுனமந் த்ராதிக்ய
வித்தையை வியந்தருள்வையோ

நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே
நாதாந்த வெட்டவெளியே
நற்சமய மானபயிர் தழையவரு மேகமே
ஞானஆ னந்தமயிலே

வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வரிய
மகிமைபெறு பெரியபொருளே
வரைரா சனுக்கிருகண் மணியாம் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே. 8