Abirami Andhathi Lyrics in Tamil – Songs 51 to 60

வாழ்வில் சிறக்க

அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண் அன்றழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. 51

செல்வம் உண்டாக

வையகம் துரகம் மதகிரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52

தவம் கைகூடிட

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முளையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துக்
தன்னந் தனியிருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே.53

கடன்கள் பைசலாக

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பாற் சென்றிழிவு பட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
சொல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54

விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த

மின்னாயிரம் ஒரு மேய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னா தொழியினும் உன்னிலும் வேண்டுவது ஒன்றில்லையே. 55

எல்லார் அன்பினையும் பெற

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கிநிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே. 56

வறுமை நீங்கிட

ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே.57

இறையுணர்வும் மன அமைதியும் பெற

அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயம்முலைத் தையல்நல்லாள் தகைசேர் நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே.58

வாரிசுகள் சிறந்து விளங்க

தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயல நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும்
அஞ்சம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. 59

மெய்யுணர்வு பெற

பாலினும் சொல் இனியாய் பணிமாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியோன் முடை நாய்த் தலையே.60