பைரவ அஷ்டகம் | Bhairava Ashtakam in Tamil

பைரவ அஷ்டகம்

செல்வசேமிப்பு, தடைகள் தகர்க்க, ஆரோக்கிய வாழ்வுக்கு பைரவ அஷ்டகம்

க்ஷேத்ரபாலர்:-

செந்நிறமான ஜ்வாலைகளையுடைய ஜடாமகுடம் தரித்திருப்பவரும், சிவப்பு நிறமுடையவரும், வெண்ணிலவை முடியில் அணிந்திருப்பவரும், தேஜோமயமானவரும் உடுக்கை, சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றைக் கைகளில் வைத்திருப்பவரும், உலகத்தைக் காவல் காப்பவரும், பாதகர்களுக்கு பயங்கரமானவரும், நிர்வாணமேனியரும், நாயை வாகனமாக உடையவரும், முக்கண்ணரும், எப்போதும் குதூகலமாக இருப்பவரும், பூத கணங்கள் பேய் பிசாசுக்களுக்குத் தலைவரும், க்ஷேத்ர பாலர் என்ற பெயரை உடையவருமான பைரவரை வணங்குகிறேன்…

அஸிதாங்க பைரவர்:-

முக்கண்ணரும், கோரிய வரங்களைத் தானே முன் வந்து அளிப்பவரும், சாந்த சொரூபியும், கபாலமாலை தரித்தவரும், கதை, கபாலம், பாணபாத்ரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றைத் தாங்கியவரும் திகம்பரனாகவும், இளமையாகவும் இருப்பவரும், நாகத்தைப் பூனூலாக அணிந்தவரும், அலங்கார சொரூபரும், ப்ராஹ்மணி என்ற சக்தியை அருகே வைத்திருப்பவரும், அன்னப் பட்சியை வாகனமாக உடையவரும், அழகுள்ளவரும், சுந்தரரும், கேட்டதைக் கொடுக்க வல்லவருமான அஸிதாங்க பைரவரை வணங்கி தியானிக்கிறேன்..

க்ரோத பைரவர்

முக்கண்ணரும் கதை, சங்கு, சக்கரம், பாசம், பாத்ரம் இவற்றை கைகளில் ஏந்திக் கொண்டிருப்பவரும், வேண்டிய வரங்களைக் கொடுப்பவரும், இளைஞராகவும் திகம்பரராகவும் இருப்பவரும், அமைதியான சுபாவமுடையவராக இருப்பவரும், இடது பக்கத்தில் திருவான சக்தியை கருடவானத்தில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், நீல நிறமான மேனியைக் கொண்டவருமான க்ரோத பைரவரை வணங்கி தியானிக்கிறேன்…

உன்மத்த பைரவர்

முக்கண்ணரும், சாந்த ஸ்வரூபியும், இளைஞராகவும், திகம்பரராகவும் திகழ்பவரும், பொன் வண்ணரும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவரும், கத்தி, கபாலம், உலக்கை, கேடயம் ஆகியவற்றைக் கைகளில் தாங்கி இருப்பவரும், வாராஹி என்ற சக்தியுடன் காட்சியளிப் பவருமான உன்மத்த பைரவரை வணங்குகிறேன்..

குரு பைரவர்

மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், டங்கம், புள்ளிமான் என்ற கிருஷ்ணம்ருகம் ஆகியவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பான பாத்திரம், கத்தி இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், காளை வாகனத்தைக் கொண்டவரும், புன் சிரிப்பான முகமுடையவரும், வெண்மையான சுத்த ஸ்படிகம் போன்ற மேனியைக் கொண்டவருமான குரு பைரவ ஸ்வாமியை வணங்கி தியானம் செய்கிறேன்..

கபால பைரவர்

மூன்று கண்களையுடையவராகவும், பக்தர்கள் வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் பாசக்கயிறு, வஜ்ராயுதம், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், இந்திராணி என்ற தேவியுடன் காட்சியளிப்பவரும், பத்ராகம் போன்ற ஒளிமயமான மேனியுடையவருமான கபால பைரவரை வணங்கி தியானம் செய்கிறேன்..

சண்ட பைரவர்

மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் வில், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், கௌரி என்ற தேவியை சக்தியாகக் கொண்டிருப்பவரும், மயிலை வாகனமாகக் கொண்டு வெண்மையான நிறத்தை உடையவருமான சண்ட பைரவரை தியானிக்கிறேன்..

பீஷ்ண பைரவர்

மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் கத்தி, சூலம், கபாலம், உலக்கை ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், சாமுண்டி தேவியுடன் இனைந்து காட்சி தருபவரும், பிரேத வாஹனம் எனப்படும் இறந்த பூத உடல் மீது அமர்ந்திருப்பவரும், சிவந்த நிறத்தையுடையவருமான பீஷணபைரவரை துதித்து வணங்குகிறேன்..

சம்ஹார பைரவர்

பத்துக் கைகளோடு முக்கண்ணனாக இருப்பவர், சர்ப்பத்தை பூனூலாக அணிந்தவர், கோரைப் பற்களுடன் பயங்கர முகத்தோற்றத்தை உடையவர், பக்தர்களுக்கு எட்டு விதமான ஐஸ்வர்யங்களைக் கொடுப்பவர், இளமையான தோற்றம் கொண்ட இவர், திகம்பரராகவும் இருப்பவர். ஸிம்ஹத்தை வாகனமாகக் கொண்டவர். தம் கைகளில் சூலம், கட்கம், டமருகம், சங்கு, சக்ரம், கதை, பானபத்திரம், கட்வாங்கம், பாசம், அங்குசம் ஆகியவற்றைக் கொண்டவர், அசுரர்களின் மண்டையோடுகளைக் கோத்து பெரிய மாலையாக அணிந்திருப்பவர், பருமனான் உடலையும், மத்தமான பயங்கர உருத்தோற்றத்தையும் கொண்டவரான, சம்ஹார பைரவரை,எப்போதும் எனக்காகவேண்டி தியானிக்கிறேன்..

ஓம் ஏம் க்லாம் கிலிம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும்
சகவம் ஆப துத்தாரணாய அஜாமல பக்தாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்ரிய வித்வேஷ்ணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ.