கர்ப்பரட்சாம்பிகை கரு உற்பத்தி மந்திரம் | Karu Urpathi Manthiram in Tamil

கரு உற்பத்தி மந்திரம் – திருமூல நாயனார் அருளியது

கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!!

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!!

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!!

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருங்குழி தேடித் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே!!

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே!!

பூவின் மணத்தை பொருந்திய வாயுவுந்
தாவி உலகின் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவினில் மெல்ல நீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிகொண்ட போதே!!

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே!!

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே!!

ஏயங் கலந்த இருவர்தரு சாபத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காண பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே!!

கர்ப்பத்துக் கேவல மாயால் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே!!

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலைசெய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே!!

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப்பகலோன்
இதஞ்செய்யும் மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ் செய்யும் அங்கியின் கோபந்தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந்தானே!!

ஒழிபல செய்யும் வினையுற்ற நானே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைக்
கழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே!!

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண்சாணது வாகுமே!!

போகத்துள் ஆங்கே புகுந்து புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே!!

பிண்டத்தின் உள்ளுறுபேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தினூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே!!

இலைப்பொறி யேற்றி யெனதுடல் வைத்தமன் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பத்து நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே!!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே!!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினும் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே!!

உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கைகலந் தேனே!!

கேட்டுநின் றேன் எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழல் பின்கரு வையுரு
நீட்டிநின் றாகத்துநேர்பட்ட வாறே!!

பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்தபின்
காவுடை தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே!!

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று காரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்றுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுஙகண்ணுதல் காணுமே!!

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிட
பண்ணுதல் செய்து பசுபாவம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக எடுத்துவைத் தானே!!

அருளள்ள தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயார் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே!!

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிற சோதி யவனும்
பகுத்துணீர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பதுவாமே!!

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதி தன் ஆண்மையே!!

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண்டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாரும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே!!

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் னாலோடில பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமாமே!!

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே!!

மாதா உதரம் மலமிகில் மந்தனும்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே!!

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அழியாகுங் கொண்டதால் ஒக்கிலே!!

கொண்டநல்வாயு இருவர்க்கும் ஒத்தொழில்
கொண்ட குழவியுங் கோமள மாயுடுங்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே!!

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்துள்ளே பகலவன் பொன்னுருப்
போல் வளர்ந்துள்ளே பொருந்துருவாமே!!

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம் தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம் தாவதிங் காரறிவாரே!!

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மை யெவ்வாறே!!

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புற பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்
முன்புற நாசி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலுமாமே!!

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே!!

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய் இன்ப மாவதுபோல்
அதற்கது வாய் நிற்கும் ஆதிப் பிரானே!!

ஏனோர் பெருமைய னாகினும் எம்மிறை
ஊணேசிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினுள்ளே!!

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைகடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே!!

கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்

  • கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.
  • கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, சுக பிரசவத்தின் மூலம் குழந்தை பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை இந்த ஸ்லோகத்தின் மூலம் நாடும் பெண்களுக்கு பிரசவ காலத்தில் எந்த வித பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை.