Thanikasala Pancharathnam

Thanikasala Pancharathnam – தணிகாசல பஞ்சரத்னம்

1. சீர்புகழும் சென்னைபுரி திருவல்லிக்கேணி நகர் செங்குந்தர் வீதிவாழும், சிவனருள் பாலனே சிவ சுப்பிர மணியனே சிவகாமித் தவப்புதல்வனே, கார்புகழும் போரூ ரிலசுரர்குலம் வேரறக் கண்டித்த கதிர் வேலனே, கனக மயிலேறி வரும் தெய்வயானை பாகனே கனகவள்ளி நாயகனே, பார்புகழுமுன் தன்பருளங் களித்திட வந்து நீ பன்மைவரந் தந்தபரனே, பங்கயன் சிறையிட்டு வைத்த தொருபாகனே பழனி மலை வடிவேலனே, தார்புகழும் மாயனிட தங்கையுடமைந்தனே ஜனகன்மகட்பதி மருமகனே, தகதகென மயிலேறி திருநடன மாடிவருந்தணிகாசலக் கடவுளே.

2. சித்திர வினோதமுடன் திகழான சென்னையில் சிறப்பான பன்னிருகையும், திருமுடியில் மகுடமும் சுட்டியும் பட்டமும் திருநீற்றுக்காப்புமழகும், இரத்தினக் கடுக்கனும் புஜகீர்த்தி பளபளென்ன ரவிதைக் கண்டி கைமார்பினில், ரஜித்தினழகும் நெற்றியிற்றிலகமும் நிகக்கன வடிவேலும் நிறைந்த வொட்டியாணமழகும், நிகரான தண்டையும் நீலமயில் சேர்வையும் நின்பெருமைசொல்ல வெளிதோ, தத்திவருஞ் சூரனை துளைத்து நீயமர் செய்த தயாபரமான துரையே தகதகென மயிலேறி திருநடன மாடிவருந் தணிகாசலக் கடவுளே.

3. ஓராறுமுகமாட யீராறுபுசமாட வோங்குவடி, வேலுமாட, உச்சிதக்குண்டலமும் கச்சிதமுடியாட ஒளியான சுட்டியாட பாராட தண்டையும் பாதச் சிலம்பாடப் பணிந்திடும் பக்தராடப் பன்னிருக்கரமாடப் பணிந்த பூஷணமாட பவள வெண்குடைகளாடத் தோராதமயிலாடக் கோழித்துவச மாடத்துலங்கு நீர்க்காவியாட தொண்டர்கள் முதலான சண்டிகேஸ்வரராட தொந்த நவவீரராட, தீராத தவ முனிவர்தானாட நீயாடி தமியனேன் முன்பு வருவாய், தகதகென மயிலேறி திருநடன மாடிவருந் தணிகாசலக் கடவுளே.

4. தந்தைதாய் தெய்வமும்நீயே கெதியலாமல் தற்காக்க வொருவரில்லை தைரியஞ்சொல்லவும் பயமது தீர்க்கவும் தரணியிலெவருமில்லை சந்ததமும் நால்வேத முன்னையே புகழ்ந்து சரணாகதி யென்றவர்க்கு, சாலோக சாமீப சாரூப மேலான சாயுச்சியந் தந்த குருவே வந்தனம் செய்ய முனதன்பர்க் கிரங்கிநீ வன்மையுடன் வரமளிப்பாய் வள்ளி தெய்வானையுடன் வாழு மயிலேறியே வரவேண்டு மெந்தனருகே, தந்திர முகந்ததிரு மாயனிடமருகனே தற்பரா நந்த பரனே தகதகென மயிலேறி திருநடன மாடிவருந் தணிகாசலக் கடவுளே.

5. நஞ்சுண்ட பரமகுரு வானதொரு தெய்வமே நாதனே குமரர்குருவே நாயகாயுனைவிட வேறு துணையில்லை யெனையாதரிப்பவருமில்லை, பஞ்சையும் நானென்ன பாவங்கள் செய்தேனோபரதவித் திடவு நீதான் பராதிருப்பதுந் தர்மமோ வுந்தனைப் பார்த்தவர்களேசார்களே, கொஞ்சமென்றெனை நீவிட்டு விட்டாலுங் குழந்தை நான் விடுவதில்லை, கோபமோ யென்மீதிற் றாபமோயென் செய்வேன் கொத்தடிமை கொண்ட முருகாதஞ்ச மென்றேயுனை கெஞ்சியே வருந்திடத் தற்கார்த்தருள் புரிவாய் தகதகென மயிலேறி திருநடன மாடிவருந் தணிகாசலக் கடவுளே.

தணிகாசலர் பஞ்சரத்னம் முற்றிற்று.