Thayumanavar Songs Lyrics in Tamil

தாயுமானவர் பாடல்கள்

1. திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெய்குவாம். 1.

ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும்
உறவனந் தம்வினையினால்
உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத்
தோஅனந் தம்பெற்றபேர்
சீரனந் தஞ்சொர்க நரகமும் அனந்தநற்
றெய்வமும் அனந்தபேதந்
திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான
சிற்சத்தியா லுணர்ந்து
காரனந் தங்கோடி வருஷித்த தென அன்பர்
கண்ணும்விண் ணுந்தேக்கவே
கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநங்
கடவுளைத் துரியவடிவைப்
பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம். 2.

அத்துவித வத்துவைச் சொப்ரகா சத்தனியை
அருமறைகள் முரசறையவே
அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான
ஆதியை அநாதியேக
தத்துவ சொருபத்தை மதசம்ம தம்பெறாச்
சாலம்ப ரகிதமான
சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப
சாந்தபத வ்யோமநிலையை
நிர்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ் சப்பொருளை
நிர்விஷய சுத்தமான
நிர்வி காரத்தைத் தடத்தமாய் நின்றொளிர்
நிரஞ்சன நிராமயத்தைச்
சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு
திவ்யதே சோமயத்தைச்
சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர
தேவதையை அஞ்சலிசெய்வாம். 3.