Mahabharatham story in Tamil 44 – மகாபாரதம் கதை பகுதி 44

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 44

ஏ துச்சாதனா ! அந்த அடிமை பேசிக்கொண்டிருக்கிறாள், நீ பார்த்து கொண்டிருக்கிறாயா ? அவளது புடவை வளர்ந்தால் என்ன ? நீ அவளை இழுத்து வந்து என் தொடையில் அமர வை, அப்போது பார்ப்போம் என்ன செய்கிறாள் என்று? இப்படி, தனது அண்ணியாரையே தகாத செயலுக்கு உட்படுத்த முயற்சித்ததைக் கண்டு கொதித்த பாஞ்சாலி, என்னை தகாத வார்த்தை சொன்ன இந்த துரியோதனின் தலை போரில் உருளும். இது சத்தியம் என சபதமிட்டாள். இதுவரை பொறுமை காத்த பீமன் அங்கு கூடியிருந்த அரசர்களின் நடுவில், அரசர்களே என் மனைவியின் மானத்திற்கு இழுக்கு வரும் வகையில் அவளை தனது தொடையில் அமர வைக்க முயற்சித்த அவனது தொடையை போரில் அடித்து நொறுக்குவேன். துச்சாதனன் மற்றும் கவுரவர் கூட்டத்தை தனியொருவனாக நின்றே அழிப்பேன். அதுவரை என் கையால் முகர்ந்து தண்ணீர் குடிக்க மாட்டேன். என் கதாயுதத்தை ஆற்றுநீரில் அடித்து மேலே எழும்பும் தண்ணீர் துளிகளை மட்டும் குடித்து உயிர்வாழ்வேன் என் சபதம் செய்தான்.

அர்ஜுனன் ஆவேசத்துடன் இங்கே சற்றும் நியாயமின்றி நடந்து கொண்ட கர்ணனை கொல்வது எனது வேலை. நகுலன் கோபத்துடன், சூது என்ற வஞ்சகத்தால் எங்குள் குடிகெடுத்த சகுனியின் குலம் அழியும் வகையில் அவனது மகன் உலூகனைக் கொல்வேன் என்றான். சகாதேவன் அனல்பறக்க, நகுலா, நீ அவன் குலத்தைக் கவனி. நான் இந்த சகுனியையே கொல்வேன். என உறுதியெடுத்தான். திருதராஷ்டிரனுக்கு பாஞ்சாலி மற்றும் பாண்டவர்கள் செய்த சபதம் அடிவயிற்றைக் கலக்கிவிட்டது. அவன் திரவுபதியின் பாதங்களை நோக்கி வணங்கினான். மருமகளே ! அம்மா பாஞ்சாலி ! என் பிள்ளைகள் உனக்கு தகாத தீய செயல்களைச் செய்து விட்டார்கள். உன் மைத்துனர்கள் என்பதால் அறியாமல் செய்த அவர்களின் பிழைகளை மன்னித்து விடு. பைத்தியக்காரர்களின் செயலை யாராவது பெரிதுபடுத்துவார்களா ? அப்படி உனக்கு நடந்ததை நினைத்து மறந்து விடு. அவர்களை மன்னித்து விடு, என்று புலம்பினான்.

பாண்டவர்களிடம், என் குழந்தைகளே ! எனக்கு நீங்கள் வேறு, கவுரவர்கள் வேறல்ல ! நீங்கள் நடத்திய சூதாட்டத்தை பொழுதுபோக்காக கருதி, அதில் தோற்ற நாட்டையும், செல்வத்தையும் மற்றுமுள்ள எல்லாவற்றையும் திருப்பி தர உத்தரவிடுகிறேன். நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். திரவுபதியுடன் நீங்கள் இந்திரபிரஸ்தத்துக்கு கிளம்புங்கள், என்றான் பயத்தில். தன் குலம் அழிந்துவிடும் என அவனுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. தான் சொன்னபடியே இழந்ததை எல்லாம் திரும்பக் கொடுத்தும் விட்டார் என்று சபையோரிடம் அறிவித்தான். இந்த நேரத்தில் சகுனி தன் திருவாயையைத் திறந்தான். மாமன்னரே ! தாங்கள் புலிகளின் வாலைப் பிடித்தீர்கள். இப்போது விட்டு விடப் பார்க்கிறீர்கள். ஆனால், ஆபத்து உங்களுக்கு தானே ! ஒன்றை செய்வதற்கு முன் நன்றாக யோசித்து செய்ய வேண்டும். செய்தபிறகு வருத்தப்படுவதில் பயனில்லை. தங்கள் செயலும் அப்படித்தான் தெரிகிறது. இப்போது பாண்டவர்களை நீங்கள் விடுவித்து விட்டால் அவர்கள் ஊரில் போய் சும்மாவா இருப்பார்கள் ? திரவுபதியை அவமானம் செய்தது உள்ளிட்டவை அவர்கள் மனதில் நிழலாடத்தானே செய்யும். விளைவு உங்கள் மக்கள் அழிவார்கள். இதெல்லாம் தேவையா ? என்றான்.

இதை கர்ணனும் தன்முகப்குறிப்பால், துரியோதனனை நோக்கி ஆமோதித்தான். உடனே துரியோதனன் நடுங்கிப் போய், மாமா சொல்வது சரிதான் ! என்றான். துச்சாதனனை அழைத்து, நான் சொல்வதை தர்மரிடம் சொல், என்று காதில் ஏதோ சொன்னான். துச்சாதனன் தர்மரிடம் சென்று, தர்மா ! நீயாக சம்மதித்து இழந்த பொருளை பெற உனக்கு தகுதியில்லை. எனவே, நீ உன் தம்பிகளுடன் காட்டிற்கு போய்விடு. நீ சத்தியவான் என்று பெயரெடுத்தவன். சத்தியவான்கள் வார்த்தை தவறுவதில்லை என்றான். இவர்கள் கொடுத்தாலும் தர்மர் வாங்கமாட்டார் என்பது உலகறிந்த ஒன்றுதான் ! தர்மர் அந்த துஷ்டனிடம் பதிலேதும் சொல்லவில்லை. இதனிடையே துரோணர் பீஷ்மர் முதலிய பெரியவர்கள் ஆலோசித்து, தர்மா ! ராமபிரான் தன் தந்தை சொல்லை மதித்து காட்டுக்குச் சென்றது போல, நீ 12 வருடங்கள் காட்டுவாசம் மேற்கொள்ள வேண்டும். ஓரு வருடம் நாட்டுக்குள் யார் கண்ணிலும் படமால் அஞ்ஞாத வாசம் செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டால், நீங்கள் இழந்ததைப் பெற தகுதியுடையவர்கள் ஆவீர்கள் என்றார்.

அப்போது திரவுபதி தர்மரிடம், அன்பரே ! தாங்கள் என்னை சூதில் இழந்து விட்டதாக இங்குள்வர்கள் சொல்கிறார்கள். நான் மட்டுமல்ல, நீங்களும், உங்கள் தம்பிகளும், என் ஐந்து பிள்ளைகளும் உங்களால் தோற்கடிக்கப்பட்டு நிற்கறோம். எங்களை மீண்டும் சூதில் வென்று மீட்க வேண்டும். எதையும் இறைசிந்தனையுடன் செய்பவர்களுக்கு தோல்வி ஏற்படுவதில்லை. நீங்கள் ஸ்ரீ நாராயணனின் துவாதச நாமங்களான 12 நாமங்களைச் சொல்லி விளையாடுங்கள். வெற்றி பெற்று எங்களை மீட்ட பிறகு நாம் சுதந்திர மனிதர்களாக காட்டுக்குள் புகுவோம். என்றாள் பகவான் கிருஷ்ணன் மீதான நம்பிக்கையில்! தர்மருக்கு இது சரியெனப்பட்டது. அவரும் சகுனியும் மீண்டும் ஆடினர்.

சகுனி இப்போதும் வஞ்சகத்துடன், தர்மா ! இப்போது உன்னிடம் ஏதுமே இல்லை. பந்தயப்பொருளாக வைப்பதற்கு ! ஒருவேளை இந்த அடிமைத்தளையில் இருந்து மீளாமல், உன் மனைவி மக்களும், நீங்களும் எங்களுக்கே சொந்தமாகி விட்டால் என்ன தருவாய் ? என்றான் ஏளனத்துடன். சகுனி ! என் புண்ணியங்கள் அனைத்தும் துரியோதனனுக்கு சொந்தமாகும் என்றார் தர்மர். தர்மர் பகடையை எடுத்தார். கேசவா! நாராயணா ! மாதவா ! கோவிந்தா ! ஸ்ரீவிஷ்ணு ! மதுசூதனா ! திரிவிக்ராமா ! வாமனா ! ஸ்ரீதரா ! ஹ்ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா என்ற 24 திருமால் நாமங்களைச் சொன்னார். பகடை உருண்டது. சகுனி தோற்றான். இது கண்டு துரியோதனாதிகள் அதிர்ச்சியடைந்தனர். சகுனி முகத்தில் ஈயாடவில்லை.