குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் மகரம் | Magaram Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் மகரம் | Magaram Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

வியாழன் கிரகம் தான் தேவர்களின் ‘குரு’ என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 1 வருடம் எடுத்துக் கொள்வார்.

அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசிக்காரர்களிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், மகர ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகரம் குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024

குரு பகவான் உங்க ராசிக்கு 3வது வீட்டிலிருந்து 4வது வீட்டான அர்த்தாஷ்டம ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாக உள்ளார். கடந்த ஒருவருட காலமாகவே 3ல் குரு பகவானின் சஞ்சாரம் இருந்ததால், எதிலும் தடை தாமதம், ஏமாற்றம், மனக்குழப்பம், எந்த செயலை செய்வதற்கும் பயம், அடிக்கடி உடல் ஆரோக்கியம் சரியில்லாமல் போவது, பிடித்த வேலை கிடைக்காமல் திண்டாட்டம், பண நெருக்கடி என பல சவால்களை சந்திந்திருப்பீர்கள். ஆனால், தற்போது இந்த அர்த்தாஷ்டம குருவால் பல பிரச்சனைகள் பாதியாக குறையும். இருந்தாலும் இந்த அர்த்தாஷ்டம ஸ்தானம் என்பது தாயார் ஸ்தானம் என்றும் சொல்வார்கள். எனவே, இந்த காலக்கட்டத்தில் தாயாருடன் வாக்குவாதம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், உங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பண நெருக்கடிகள் தோன்றும். அதனால் அனாவசிய செலவுகளை முற்றிலும் குறைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரால் அடிக்கடி பிரச்சனை வரும், நீங்கள் அமைதியாக சென்றால் பெரிய பிரச்சனையை தவிர்க்க முடியும். கவலைப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒருசிலருக்கு தீய பழக்கங்களுக்குச் அடிமையாகக் கூடிய சூழ்நிலை வந்து நீங்கும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வண்டி வாகனத்தில் செல்லும் நிதானம் அவசியம்.

குரு பகவான் அமரக்கூடிய இடம் தான் பிரச்சனையாக இருந்தாலும் பார்க்ககூடிய இடம் அற்புதமான பலன்களை கொடுக்கக்கூடியவை. அந்தவகையில், குரு பகவான் தனது 5வது பார்வையாக உங்க ராசிக்கு 8வது வீடான அஷ்டம ஸ்தானத்தை பார்வையிடுவதால் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையிடம் இருந்துவந்த மனக்கசப்பு விலகும். கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட மகர ராசியினருக்கு ஒரு புது மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரால் ஏற்பட்ட குழப்பம் விலகும். சுயதொழிலால் லாபம் ஏற்படும்.

சிலர் அடகுவைத்த நகைகளை மீட்டெடுப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணியிட மாற்றம் உங்களுக்கு பிடித்தது போலவே அமையும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அடுத்ததாக, குருபகவான் தனது 7வது பார்வையாக உங்க ராசிக்கு 10வது வீட்டை பார்வையிடுவதால், தொழில் ஆர்வம் அதிகரிக்கும். அதாவது புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் ஏற்படும். ஆனால், பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவிற்கு இருந்தால் பிரச்சனை இருக்காது. கடன் கொடுப்பதையும், கடன் வாங்குவதையும் அறவே நிறுத்த வேண்டும்.

அதேபோல், எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை கொடுக்கும். எனவே, ரொம்ப எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு தடை தாமதத்துடன் கிடைக்கும். மேலும், குரு பகவான் தனது 9வது பார்வையாக உங்க ராசிக்கு 12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்வையிடுவதால், தண்டச் செலவுகள் குறையும். நிலம், மனை போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பாக அந்த சொத்தில் இருக்கும் வில்லங்களை அறிந்து அதன்பிறகு முதலீடு செய்வது நல்லது. இல்லையென்றால் இழப்பு உங்களுக்கு தான். ஒரு சிலருக்கு குழந்தை பிறப்பால் சுபசெலவுகள் வரலாம். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் அதிகம் முயற்சி எடுத்து படித்தால் வெற்றி உங்களுக்கே.