வெள்ளிக் கெண்டைக் கண்ணழகி | Velli Kendai Kannazhaki
வெள்ளிக் கெண்டைக் கண்ணழகி
துள்ளிச் செல்லும் மானழகி
அள்ளித் தரும் அன்பழகி
தங்கத் தமிழ்ப் பேரழகி
வைகைநதிக் கரை யோரம்
வாகாய்நீ வீற்றி ருப்பாய்
பொய்கையிலே தாமரை போல்
பூத்துச் சிரித்தி ருப்பாய்
மலையத் துவச னுக்கு
மகளாய் பிறந்து வந்தாய்
திக்விஜயம் செய்து வந்தாய்
திக்கெட்டும் வென்று வந்தாய்
சுந்தரரைக் கண்ட பின்னே
சொக்கிப்போய் காதல் கொண்டாய்
மனம்போல் மணம் முடித்தாய்
மதுரையை ஆண்டு வந்தாய்
மீனாள் உன்பெயர் சொன்னால்
தேனாறு ஓடுதடி
தானாக வினைகளெல்லாம்
காணாமல் போகுதடி
பூவை உன்னைப் பார்த்திருந்தால்
பூவுலகம் மறக்குதடி
பாவை யுன்னைப் பாடிவந்தால்
பாவமெல்லாம் கரையுதடி
நீயேந்தும் கிளியாக
நான் மாறக் கூடாதோ? – உன்
காலடியில் ஒரு மலராய்
நான் சேரக் கூடாதோ?