எதிரிலே தோன்றி வருவாய் | Ethirile Thondri Varuvai

எதிரிலே தோன்றி வருவாய் | Ethirile Thondri Varuvai

கார் வளரும் மேனியாய் கருப்பண்ண சாமியே
கதிவளரும் குதிரையில் கைவளரும் வாளுடன்
கண் எதிரில் தோன்றி வருக

தேர் வளரும் கோவிலாய் திசை வளரும் புகழனே
தெரிந்தவரை நல்லதே செய்துவரும் எங்களைத்
தேடியே ஓடி வருக

மார்வளரும் மாலையாய் மனை வளரும் தெய்வமே
மடைவளரும் வெள்ளமாய் மழை பொழியும் மேகமாய்
மலையினை நோக்கி வருக

சீர்வளரும் காலிலே சேர்திடும் சதங்கைகள்
செககண செககணச் செவிபட முழங்கவே
தெருவிலே ஓடி வருக

தார் வளரும் மெய்யனே தமிழ் வளரும் ஐய்யனே
தண்டையுடன் கிண்கினி தத்தினத்தோம் என்னவே
சத்தியம் முழங்க வருக

பேர்வளரும் வீரனே புகழ் வளரும் கருப்பனே
புகை வளரும் தூபமும் பூவளரும் பூசையும்
புரிந்துமே எழுந்து வருக

ஏர்வளரும் அழகனே எங்கள் குல தெய்வமே
எப்பிழை செய்யினும் அப்பிழை நீக்கவே
எதிரிலே தோன்றி வருவாய்.