Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அன்பர் நெறி

  1. அன்பர் நெறி

அத்துவா எல்லாம் அடங்கச்சோ தித்தபடிச்
சித்துருவாய் நின்றார் தெளிவறிவ தெந்நாளோ. 1.

மூச்சற்றுச் சிந்தை முயற்சியற்று மூதறிவாய்ப்
பேச்சற்றோர் பெற்றஒன்றைப் பெற்றிடுநாள் எந்நாளோ. 2.

கோட்டாலை யான குணமிறந்த நிர்க்குணத்தோர்
தேட்டாலே தேடுபொருள் சேருநாள் தெந்நாளோ. 3.

கெடுத்தே பசுத்துவத்தைக் கேடிலா ஆனந்தம்
அடுத்தோ ரடுத்தபொருட் கார்வம்வைப்ப தெந்நாளோ. 4.

கற்கண்டால் ஓடுகின்ற காக்கைபோல் பொய்ம்மாயச்
சொற்கண்டால் ஓடும்அன்பர் தோய்வறிவ தெந்நாளோ. 5.

மெய்த்தகுலங் கல்விபுனை வேடமெலாம் ஓடவிட்ட
சித்தரொன்றுஞ் சேராச் செயலறிவ தெந்நாளோ. 6.

குற்றச் சமயக் குறும்படர்ந்து தற்போதம்
அற்றவர்கட் கற்றபொருட் கன்புவைப்ப தெந்நாளோ. 7.

தர்க்கமிட்டுப் பாழாஞ் சமயக் குதர்க்கம்விட்டு
நிற்குமவர் கண்டவழி நேர்பெறுவ தெந்நாளோ. 8.

வீறியவே தாந்தமுதல் மிக்க கலாந்தம்வரை
ஆறுமுணர்ந் தோருணர்வுக் கன்புவைப்ப தெந்நாளோ. 9.

கண்டஇட மெல்லாங் கடவுள்மயம் என்றறிந்து
கொண்டநெஞ்சர் நேயநெஞ்சிற் கொண்டிருப்ப தெந்நாளோ. 10.

பாக்கியங்க ளெல்லாம் பழுத்து மனம்பழுத்தோர்
நோக்குந் திருக்கூத்தை நோக்குநாள் எந்நாளோ. 11.

எவ்வுயிருந் தன்னுயிர்போல் எண்ணுந் தபோதனர்கள்
செவ்வறிவை நாடிமிகச் சிந்தைவைப்ப தெந்நாளோ. 12.