Thiruppugazh Song 132 – திருப்புகழ் பாடல் 132

திருப்புகழ் பாடல் 132 – பழநி

தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த …… தனதான

கருகி யகன்று வரிசெறி கண்கள்
கயல்நிக ரென்று …… துதிபேசிக்

கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
கடிவிட முண்டு …… பலநாளும்

விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
விதிவழி நின்று …… தளராதே

விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
விதபத மென்று …… பெறுவேனோ

முருக கடம்ப குறமகள் பங்க
முறையென அண்டர் …… முறைபேச

முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
முரணசுர் வென்ற …… வடிவேலா

பரிமள இன்ப மரகத துங்க
பகடித வென்றி …… மயில்வீரா

பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிய மர்ந்த …… பெருமாளே.