Thiruppugazh Song 207 – திருப்புகழ் பாடல் 207

திருப்புகழ் பாடல் 207- சுவாமி மலை
ராகம் – சக்ரவாஹம்; தாளம் – அங்கதாளம் (8 1/2)
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தனதனன தனதனன தான தந்தனம்
தனதனன தனதனன தான தந்தனம்
தனதனன தனதனன தான தந்தனம் …… தனதான

ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் …… சனையாலே

ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் …… திடுவேனைக்

கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்
செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் …… டருமாமென்

கருணைபொழி கமலுமுக மாறு மிந்துளந்
தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் …… தெனையாள்வாய்

திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
திகழருண கிரிசொருப னாதி யந்தமங் …… கறியாத

சிவயநம நமசிவய கார ணன்சுரந்
தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் …… புதல்வோனே

குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் …… திடுவோனே

குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் …… பெருமாளே.