விநாயகர் அகவல்: Vinagar Agaval Lyrics

கடவுளர்களில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். ஆக விநாயகர் என்பது, இவருக்கு மேல் (முதன்மையானவர்) பெரிய தலைவர் இல்லை என்பது முழுப்பொருளாகும். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதுமாக காணப்படுகிறது. இவருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், விக்னேஸ்வரன் என பலப் பெயர்கள் உள்ளது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் என அழைக்கப்படுகிறது. இந்த காணாதிபத்தியமானது பின்னர் சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. ஸ்ரீவைணவர்கள் விநாயகரை தும்பிக்கை ஆழ்வார் என அழைக்கிறார்கள். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்பாக விநாயகரை வேண்டியே செய்யப்படுகிறது.மேலும் பல ஆன்மிகம் தகவல் பெற எங்கள் வலைத்தளம் வாருங்கள்

பஞ்சபூத அம்சம் நிறைந்த விநாயகர்:
தெய்வ அம்சங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதே போன்று விநாயகரின் உருவ அமைப்பில் இருக்கும் தத்துவம ஐந்து பெரும் சக்திகளைக் காட்டுகிறது. மடித்து வைத்துள்ள ஒரு பாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவரது மார்புப் பகுதி நெருப்பையும், இரண்டு புருவங்களின் இணைந்த அரை வட்ட வடிவம் காற்றையும், அவற்றின் நடுவே வளைந்துள்ள கோடு ஆகாயத்தைக் குறிப்பதாகவும் அமைகின்றது. விநாயகர் பஞ்சபூத அம்சமானவர் ஆவார்.

நவக்கிரக நாயகனான விநாயகர்:
ஓம்காரமான பிரணவத்தின் நாயகனாகத் திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்கள் அடங்கியிருக்கின்றன. விநாயகரது நெற்றியில் சூரியன் உறைந்துள்ளார். அதே போல் நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனியும், தலையில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்ரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்தற்கான பலன்களைப் பெறலாம்.

விநாயகர் அகவல்:
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்க சகல சௌபாக்கியங்களும் கிடைப்பது உறுதி. விநாயகர் குறித்து எவ்வளவோ பக்தி இலக்கியங்கள், பாடல்கள் பாடப் பெற்றிருந்தாலும் தமிழ் மூதாட்டியான புலவர் ஔவை பாட்டி உருவாக்கிய விநாயகர் அகவல் பல சிறப்புகள் வாய்ந்ததாகும். இந்த அகவலை பாடிய ஔவையார் பாட்டி வாழ்ந்த காலம் 14 ஆம் நூற்றாண்டு என கூறப்படுகிறது.

விநாயகர் அகவல் பாடலை மாதந்தோறும் வருகிற சதுர்த்தியின் போதும், சங்கடஹர சதுர்த்தியின் போதும், விநாயகர் சதுர்த்தியின் போதும் பாராயணம் செய்து வழிபட்டால் விநாயகர் இரட்டிப்புப் பலன்களை அருள்வது நிச்சயம்.

விநாயகர் அகவலின் சிறப்புகள்:
விநாயகர் முன்பு அமர்ந்து தனிச்சிறப்புடைய இந்த அகவலை மனம் ஒன்றி பாராயணம் செய்தால் நம்முடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும். சிறப்பு வாய்ந்த இந்த துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களின் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். எல்லா வகைகளிலும் வெற்றி உண்டாகும். இதை எட்டு நாட்கள் ஓதி வர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமா சித்தி கைகூடும் என்பது ஐதீகம். தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும், மேம்பட்டு திகழும்.

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

ஓம் விக்ன விநாயகா போற்றி!