Swamimalai Murugan Kandha Sashti Kavasam in Tamil

சுவாமி மலை முருகன் கந்தசஷ்டி கவசம்

முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும். இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும்.

இதே போல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் தனித்தனி சஷ்டிக் கவசம் உள்ளது.

இந்த ஆறுபடை வீட்டிற்குரிய சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.

இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்)

(இக்கவசம் வியாழக்கிழமையன்று பாராயணம் செய்வது சிறப்பாகும். கல்வி மேன்மை பெறும். செல்வமும், நல்ல பதவியும், பேரும் புகழும் கிட்டும்.)

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கார மாக உதயத் தெழுந்தே
ஆங்கார மான அரக்கர் குலத்தை
வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே
நான்கு மறைகள் நாடியே தேடும்
மான்மரு கோனே வள்ளி மணாளனே

நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
காணநீ வந்து காப்பதும் கடனே
காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் முதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
அதிசய மாக அமைத்தவா போற்றி

திரியட் சரத்தால் சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்
மதுர மாய் அளிக்கும் மயில்வா கனனே
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறுசிரமும் அழகிய முகமும்

ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்
சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்
தரங்குலைந்(து) ஓடத் தாரகா சுரன்முதல்
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
சீர்திருச் செந்தூர்த் தேவசே னாதிபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித்திகள் அருள் ஈசன், புதல்வா

துஷ்டசங் காரா சுப்பிர மணியா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொள்ளாக் காட்சி காட்டிய சடாட்சர
சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்

தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
அர்ச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய்
பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச்
சல்லாப மாகக் சகலரும் போற்ற
கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்

சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு
திட்டு முறைகள் தெய்வச் சாபம்
குட்டல் சோம்பல் கொடிய வாந்தியம்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்
உன்னுடைய நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை

செய்வதுன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரவே சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!!