சித்திரை மாத விரதங்கள்-Chithirai Matha Viratham

பொதுவாக சித்திரை திங்களில் ஸ்படிக லிங்கத்தில் ஈசனை ஆவாஹனம் செய்து அபிஷேகம் செய்து அலங்கரித்து பொற்றாமரையில் வைத்து, நருமண மலர்களால் அர்ச்சித்து தூப, தீப மலர்கள் கொண்டு உபசாரங்கள் செய்து இறைவனின் நாமத்தை உளமுருக ஜெபித்து ஆராதனை செய்து வழிபடவேண்டும். இவ்விரதத்தை கடைபிடித்தால் 1000 அசுவமேதயாகம் செய்த பலன்.

சித்திரைமாத அஷ்டமி சூதாணி-தானும்-வணங்கினால் 10000 அசுவமேதக யாகபலன்.

சித்திரை முதல் நாள்
🛕 தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ராசியாக சஞ்சரித்து பன்னிரண்டாவது ராசியான மீனத்தில் சஞ்சரிப்பார் இந்த சுழற்சியே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். எனவே சூரியனின் பயணம் தொடங்கும் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிப்பதையே தமிழ் வருடப்பிறப்பு என மக்கள் கோண்டாடுகின்றனர். அன்றைய தினம் காலையில் நீராடி உடலையும், வீட்டையும் சுத்தப்படுத்தி சூரிய உதயத்தை தரிசித்து குடும்பத்துடன் தங்களது குலதெய்வத்தின் கோவிலுக்கோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று இறைவனை வழிபடவேண்டும்.

🛕 பாசிப்பருப்பு, சுண்டல், பாயசம், வேப்பம்பூ பச்சடி. மாங்காய் பச்சடி, நீர்மோர், பானகம் ஆகியவற்றை செய்து வீட்டில் வழிபட்டு அன்று தயாரித்ததை தானம் செய்யலாம். மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்து மாறி மாறி வரும் என்ற உண்மையை உணர்த்தவே இவைகள், மேலும் சமையலிலும் இனிப்பு, உப்பு, காரம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு என்ற அறுசுவையுடன் செய்து படைப்பார்கள். சூரியனை வைத்து கணக்கிடும் சூர்ய மானம் என்பதை தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் பின்பற்றுவர். சந்திரனை வைத்துக் கணக்கிடும் சந்திரமானத்தை கன்னட மற்றும் ஆந்திர மக்கள் பின்பற்றுவர். சூரிய மானத்திற்கும் சந்திர மானத்திற்கும் சில தினங்கள் வித்தியாசப்படும். அன்றைய தினம் பஞ்சாங்கம் வாசித்தல் என்று அந்த வருடத்திற்கான பொது பலன்களை பெரியோர்கள் கூடி வாசிப்பர். வழிபாடுகளுடன் வீட்டில் உள்ள பெரியோர்களையும் வணங்கி ஆசீர்வாதம் பெறுவது நல்லது.

சித்திரை பௌர்ணமி
🛕 ஒருவேளை மட்டும் பால் அன்னம் உண்டு சிவனை பூஜித்தல் நலம் பல பயக்கும். சித்திரைமாதம், சித்திரை நட்சத்திரம் இரண்டுமே அம்பிகைக்கு உகந்தவை. இம்மாதத்தில் சூரியன் உச்சபலம் அடைவதும் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் சிறப்பு. பித்ருகாரகன் சூரியனுக்கு அதிதேவதை சிவபெருமான், மாத்ருகாரகன் சந்திரனுக்கு அதிதேவதை பார்வதி. எனவே இருவரும் ஒன்று சேரும் நாளை சிவசக்தி ஐக்கிய நாள் என்பதால் சிவ பார்வதியை வணங்குதல் சிறப்பு. அன்று ஈசனுக்கும் உமைக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்டு தரிசிப்பதே தீயவை கடந்துபோம் என்பதாகும். சித்திரை மாதம் சித்திரா நட்சத்திரத்தன்று மாசு மருவின்றி பிரகாசிக்கும் முழுநிலவே சித்ராபௌர்ணமி எனப்படும்.

🛕 யமனுக்கு உதவியாளராக ஈசனால் பணிக்கப்பட்டு மக்களின் கணக்குகளை ரகசியமாய் வைத்திருக்கும் சித்ர குப்தனின் பிறந்தநாள் இதுவே. சித்-மனம், குப்த-மறைவு. நம் மனதில் மறைந்துள்ள அச்சத்தின் வடிவமே சித்ரகுப்தம் என்பர். பாவத்தைச் செய்யும்போது பயம் வரும். பாவங்கள் கூடக்கூட அச்சமும் அதிகரிக்கும், இதுவே பாவக் கணக்காக எழுதப்படுகின்றது, அனைவரது குற்றங்களை அறிந்து உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை ரகசியமாக வைவத்துக் காப்பாற்றுபவர் சித்ரகுப்தன், சித்ராபௌர்ணமி அன்று நாம் செய்யும் நற்செயல்கள் பல நல்ல பலனைத் தரும். மேலும் அன்று விரதம் இருக்கும்போது சித்ரகுப்தனின் கதையைப் படிப்பவர்களுக்கு நரகம் கிடைக்காது என்கிறது வேதம்.

🛕 பரமன் பார்வதி வரைந்த ஓவியத்திற்கு உயிர் தர எழுந்த சித்திரபுத்திரன் தமது பிறவி தோஷம் நீங்க பசுவின் வயிற்றுள் புகுந்து வெளிப்பட்டார். பசுவின் புத்திரனாக வெளிபடதினம் சித்திரைமாத பௌர்ணமி. இவரை நினைத்து விரதம் இருப்பது மட்டுமன்றி முடிந்த அளவிற்கு அவர் கோவிலுக்குச் சென்று வழிபட்டு அருள் பெறவும்.

🛕 சித்திரக்குப்தருக்கென்று தனிக்கோவில்கள் 1.காஞ்சிபுரம், 2.தேனி மாவட்டத்தில் கோடாங்கிப்பட்டி (தேனி போடிநாயக்கனூர் சாலை-9) உள்ளன.

🛕 அதிகாலை வீடு வாசலைச் சுத்தம் செய்து மாக் கோலமிட்டு சிதரகுப்தன் உருவை பூஜை அறையில் வரைய வேண்டும். சித்ரகுப்தன் படியளப்பு என்று ஒரு பேப்பரில் எழுதி அவரது கைகளில் ஏடும் எழுத்தாணியும் வரைய வேண்டும். மத்து, உளி, நோட்டு, பென்சில், பேனா, பேப்பர் ஆகியவற்றை அருகில் வைக்கவும். உப்பு இல்லாத உணவை ஆகாரமாக ஒரு வேளை உண்ண வேண்டும். அன்றைய தினம் காலையில் தினசரி பூஜைகளை முடித்து ‘சித்ரகுப்தாய நம’ என்று நாள் முழுக்க சொல்லிக்கொண்டே அன்றாட அலுவல்களைச் செய்ய வேண்டும்.

🛕 நிலவு உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பயத்தம் பருப்பும் எருமைப் பாலும் கலந்த பாயாசம் அல்லது சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், இவற்றில் இயன்றவற்றை நைவேத்தியமாக தயார் செய்து பூஜை செய்து உணவு, உடை தானம் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப குழைந்தைகளுக்கு பேனா, பென்சில், நோட்டு என வழங்கவும். எருமைப் பால், மோர் சேர்த்துக் கொள்ளலாம். காமதேனு வயிற்றிலிருந்து சித்ரகுப்தர் பிறந்தார் என்று ஒரு கூற்று இருப்பதால் சித்ரா பௌர்ணமியன்று பசுவிடம் கிடைக்கும் பால், மோர், தயிர், என்று எந்த பொருளையும் பயன் படுத்தக் கூடாது. பசுவிற்கு தீவனம் வாங்கிக் கொடுக்கவும். இந்த விரதம் இருப்போர் எம பயமின்றி வாழ்வர்.

சித்ரகுப்த விரத மகிமை
🛕 தன் மகன் கெட்ட சகவாசத்தினால் தீயச் செயல்கள் புரிந்து முரடனானான். அவனைக் கண்டு வருந்திய தாய் இறக்கும் தருவாயில் அவனை அழைத்து ஒவ்வொரு பௌர்ணமியிலும் சித்ர குப்தாய நம எனச் சொல்லிக்கொண்டிரு. அப்படி முடியாவிட்டால் சித்ரா பௌர்ணமி அன்றாவது காலையிலிருந்து ஓம் சித்ரகுப்தாய நம எனச் சொல்லு என்று சொல்லி உயிர் விட்டாள். அவனும் தன் தாயின் சொல்படி சித்ர பௌர்ணமி அன்று சித்ர குப்தாய நம எனச் சொல்லி வந்தான். அவன் இறப்பதற்கு ஏழு நாட்கள் முன் அவன் கணக்கை எடுத்துப் பர்த்த சித்ரகுப்தர் அவன் தன் பெயரைச் சொல்லியது தவிர வேரு எந்தப் புண்ணியமும் செய்தது இல்லை என்பதை அறிந்து அவன் கனவில் தோன்றி நீ உனக்குச் சொந்தமான இட்த்தில் ஓருகுளம் வெட்டு அதில் ஒரு பசு வந்து நீர் குடித்தாலும் அதுவே உனக்கு புண்ணியம் என்றார்.

🛕 நீ இறந்ததும் யமலோகத்தில் உனக்கு கொஞ்சம் நேரம் சொர்க்கம் பின் நரகம் என்பார்கள் உனக்கு முதலில் சொர்க்கம் வேண்டும் எனக் கேள் எனக் கூறி மறைந்தார். அதன் படி அவனும் ஓர் குளம் வெட்டினான். ஆனால் நீர் வரவில்லை. ஏழாம் நாள் கொஞ்சம் நீர் வந்தது அதுகண்ட சித்ரகுப்தன் பசு உருக்கொண்டு அங்கு வந்து ம்மா என கத்த மற்ற பசுக்கள் அங்கு வந்தன அதில் ஒரு பசு அந்த நீரைக் குடித்தது. ஏழாம் நாள் முடிவில் அந்த முரடன் இறந்தான். யமலோகத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.

🛕 அவன் கணக்கைக் கேட்ட யமனிடம் அவன் ஒரு குளம் வெட்டினான் அதில் ஒரு பசு நீர் குடித்தது என்றார். அப்படியானால் மூனேமுக்கால் நாழிகை சொர்க்கத்திலிருக்க அனுமதி பின்னர் நரகம். முதலில் நீ எதை விரும்புகிறாய் என்றதும் கனவில் கேட்டது ஞாபகம் வந்து முதலில் சொர்க்கம் என்றான். அவன் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவன் வெட்டிய குளத்தில் நீர் ஊற ஊற நிறைய பசுக்கள் நீர் குடிக்க அவன் புண்ணிய கணக்கு அதிகரிக்க அதைந்தொடர்ந்து சொர்க்கத்திலேயே வாசம் புரிந்தான். இது சித்ரகுப்த வழிபாட்டினால் அவனுக்கு கிடைத்த பலன். அது போன்ற பலனை அனுபவிக்க சித்ரா பௌர்ணமியன்று விரதமிருந்து பலன் பெருங்கள்.

வெள்ளிக்கிழமை விரதம்
🛕 வளர்பிறையில் வரும் சுக்கிரவாரத்தில் அனுஷ்டிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குமுன் எழுந்து பார்வதி தேவியை வணங்கி தூய நீராடி நித்ய பூஜைகள் செய்த பின்னர் ஒரு கும்பத்தில் நீர் எடுத்து மாவிலை மஞ்சள் தடவி தேங்காய் பூர்ண கும்ப அலங்காரம் செய்து பார்வதிதேவியை அதில் எழுந்தருளும்படி செய்யவும். அந்த கலசத்தை அம்பிகையாகப் பாவித்து சந்தனம், குங்குமம் இட்டு, பூச் சொரிந்து தெரிந்த அம்மன் துதிகளைச் சொல்லி மனதார வழிபடவும். அரிசி பாயசம் முதலிய இனிப்பு வகைகளை நிவேதனம் செய்து தீபாராதனை காட்டி வேண்டவும். ஒரு வேளை உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும். வசதிக்கேற்ப மங்களப் பொருட்களுடன் ஆடைகளை மற்றவர்களுக்கு அளித்து அவர்களிடம் ஆசி பெறவும். இந்த விரதம் கடைப்பிடிப்போர் வீட்டில் சுபிட்சத்தன்மை நிலைத்து சுமங்கலித்தன்மை நீடிக்கும்

சித்திரை பரணி விரதம்
🛕 சித்திரை பரணி நட்சத்திரத்தன்று பைரவரை பூஜித்து விரத மிருந்தால் எதிரிகள் தொல்லை அகலும். முன்னேற்றத் தடைகள் தூளாகும்.

நட்சத்திர புருஷ விரதம்
🛕 சித்திரை மாத மூல நட்சத்திர நாளில் விரதமிருந்து பூஜைகள் மேற்கொண்டு தானம் செய்தால் நினைத்த நல்ல காரியங்கள் நடைபெற்று வைகுந்தப் பதவி கிட்டும். லட்சுமியையும் நாராயணரையும் இனைந்து பூஜை செய்யப்படுவதால் நட்சத்திர புருஷ விரதம் எனப்பட்டது.

அட்சய திருதியை விரதம்
🛕 அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள் வளர்பிறையே திருதி எனச் சிறப்பிக்கப்படும். இந்த மூன்றாம் நாள் பிறையைத்தான் இறைவன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். அதனால்தான் நாம் மூன்றாம் பிறை கண்டு மகிழ்கின்றோம். சித்திரை வளார்பிறை மூன்றாம் நாள் அட்சய திருதியை. உதயகாலத்தில் திதி இருந்தால் சிறப்பு. சந்திரனும் சூரியனும் உச்சம் பெற்று காணப்படுவர். அட்சயம் என்றால் குறைவு இல்லாமல் தொடர்ந்து வளர்வது என்றும் எடுக்க எடுக்க குறையாதது எனவும் பொருள்.

3-ம் பிறை சந்திர தரிசனம் சிறப்பு
🛕 திரௌபதி அபயம் கிருஷ்ணா என்றபோது அவள் மானம் காக்க கிருஷ்ணர் அட்சய வஸ்திரம் அளித்தார். எனவே இந்த நாள் பெண் மானம் காத்த நாள் எனப்படும். இன்று பெண்கள் பாஞ்சாலி அபய மந்திரம் “சங்கு சக்ர கதாபாணே த்வாரகா நிலையா ச்யுத! கோவிந்த! புண்டரீகாக்ஷ! ரக்ஷமாம் சரணாகதம்” என்று சொல்லி சுமங்கலி பூஜை செய்து இயன்ற தானம் அளித்தல் சிறப்பு. குசேலன் தன் நணபர் கிருஷ்ணனைப் பார்த்து செல்வம் பெற்ற நாள். மாதவி மகள் மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் கிடைத்த நாள். உணவு பஞ்சம் ஏற்பட்டபோது காசியில் அன்னை அன்னபூரணி அட்சய பாத்திரத்தின் மூலம் உணவு வழங்கினாள். பரமசிவன் அன்னையிடம் உணவு பெற்றார். சிவனுக்குகந்த நாள். அட்சய திருதியை நாளில் தான் பிரம்மன் பூமியில் உயிர்களை படைத்தான். வேதவியாசர் விநாயகர் துணையுடன் மகாபாரதம் எழுத தொடங்கிய நாள்.

🛕 குபேரன் அட்சய திருதியன்றுதான் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான். கங்கை பூவுலகை தொட்ட நாள். கங்கோத்ரியில் உள்ள கோவில் அட்சய திருதியன்றுதான் திறக்கப்படுகின்றது. பாற்கடலில் தோன்றிய திரு மால் எனும் மகாவிஷ்ணுவை சேர்ந்ததால் திருமால் ஆன நாள். மாலவன் மார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாளும் இதுவே. அன்று லட்சுமி பூஜை செய்வது நலம் பயக்கும். அட்சய திருதியை அன்று முன்னோர்களை நினைத்து பூஜைகள் செய்து வழிபடலாம். அட்சய திருதியை நாளில் சிவபார்வதி, மகாவிஷ்ணு-மகாலட்சுமி, தன்வந்திரி, ஹயக்கிரீவர், குபேரன் ஆகியோரை வழிபட்டால் நன்மை பயக்கும் என்கிறது புராணங்கள்.

திருதியை விரத பலன்
🛕 கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை கடை பிடித்தால் நல்ல கணவனை பெருவார்கள். தங்கத்தில் கௌரி விக்ரகம் செய்து ஒரு மனதுடன் கௌரி பூஜை செய்து இரவு உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். இந்திராணி பிள்ளைவரம் வேண்டி இந்த பூஜை செய்து ஜெயந்தனைப் பெற்றாள். இந்த விரதம் இருந்தே அருந்ததி சப்தரிஷி மண்டலத்தில் எல்லோரும் வணங்கும் நிலையடைந்தாள். (திருமணத்தில் அருந்ததி பார்த்தல்). ரோகிணி இந்த பூஜை செய்ததால் தன்னுடைய சகோதரிகள் 26 பேரும் திகைக்கும்படியாக கணவன் சந்திரனின் காதல் மனைவியாக இருந்தாள். தருமர் அட்சய திருதியை விரதம் இருந்து போரில் வெற்றி பெற்றதுடன் இழந்த நாட்டையும் பெற்றார். அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி அவதரித்ததால் பொன்னும் பொருளும், ஆடை அணிகலன்கள் எல்லாம் வாங்கலாம். அன்றைய தினம் உப்பு வாங்குவது லட்சுமி கடாட்சம் கொண்டுவரும்.

🛕 ராமர் திரேத யுகத்தில் ரகுவம்சத்தில் உத்தராயணத்தில் சித்திரை மாதம் சுக்லபஷ நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் சிம்ம லக்னத்தில் அவதரித்தார். அந்த நாளே ஸ்ரீராமநவமி எனப்படும். சில சமயம் இந்தநாள் பங்குனியிலும் அமையும்.

🛕 ஸ்ரீராமநவமி அன்று காலையில் எழுந்து நீராடி வீட்டு வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டி மாக்கோலமிட்டு பூஜையறையை சுத்தம் செய்து ராமர், சீதை, பட்டாபிஷேகப் படம், அனுமன் படம், ஸ்ரீராமர் ஜனன ஜாதகம், இவற்றுள் வீட்டில் இருப்பதை சுத்தம் செய்து சந்தனப் பொட்டு வைத்து விளக்கேற்றி தூபம், தீபம் காட்டி பூஜை செய்து ஸ்ரீராமர் துதிகளை சொல்லி வழிபடவும். பாசிப்பருப்பு, சுண்டல், பாசிப்பருப்பு பாயாசம், நீர்மோர், பானகம், வடை பழவகைகள் இவற்றுள் இயன்றவற்றை நிவேதனம் செய்து அதையே முதல் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

🛕 மற்ற விரதங்கள் போன்றே உபவாச முறைகளைக் கடைப் பிடிக்கலாம். மாலையில் நீராடி ஆலய தரிசனம் செய்து அங்கு நடைபெறும் சொற்பொழிவுகள், உற்சவங்கள், வழிபாட்டு முறைகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம். இரவு எளிய வகை உணவு எடுத்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இந்த காலம் கோடைக் காலமென்பதால் பானகம், நீர்மோர், தயிர்சாதம், காலத்திற்கேற்ற ஆடைகள், காலணிகள், குடை ஆகியவற்றை தானம் செய்யலாம். அன்று முழுவதும் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பது சிறப்பானது.

சித்திரை மாத சிறப்புகள்
பரசுராமர் அவதாரம் நிகழ்ந்தது.
வேதங்களைக் காக்க மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்தது.
சுக்லபட்ச அஷ்டமியில் அம்பிகை அவதாரம், அன்றைய தினம் புனித நதிகளில் நீராடல் சிறப்பு.
சித்திரைமாத சுக்லபட்ச பஞ்சமியில் மகாலஷ்மி வைகுண்டத்திலிருந்து பூமிக்கு வந்த தினமாதலால் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு.