மகா சிவராத்திரி 2023 எப்போது? விரதம் இருக்கும் நேரம் மற்றும் முறை

மகா சிவராத்திரி 2023 எப்போது? விரதம் இருக்கும் நேரம் மற்றும் முறை

சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் மிகவும் புண்ணியம் நிறைந்தது மகா சிவராத்திரி விரதம். மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரியாக போற்றப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து சிவனுக்கு பூஜை செய்து, வழிபாடு செய்தால் பாவங்கள், துன்பங்கள் நீங்கும். மறு பிறவி இல்லாத நிலையான மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வழக்கமாக சிவாலயங்களில் இரவு பள்ளியறை பூஜை முடிந்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். ஆனால் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் தொடர்ந்து பூஜைகள், யாகங்கள் நடத்தப்படும். சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இரவு முழுவதும் கண் விழித்து, சிவனின் நாமங்களை இடை விடாது உச்சரித்த படி, சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

அம்பாளுக்கு ஒன்பது இரவுகள் நவராத்திரி. சிவனுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி என்பார்கள். சிவ வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான நாள் சிவராத்திரி. சிவ பெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்த நாளையே மகா சிவராத்திரியாக நாம் கொண்டாடுகிறோம். சக்தியின் இரு வடிவங்களான சிவனும் – சக்தியும் ஒரே சக்தியாக இணைந்த நாளையே மகாசிவராத்திரி என்கிறோம்.

மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து, இரவில் கண் விழித்து, சிவ வழிபாடு செய்தால் பாவங்கள் தொலைந்து, மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். சிவ பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சிலர் மகா சிவராத்திரியன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பார்கள். இன்னும் சிலர் இரவு முழுவதும் கண் விழித்து, மறுநாள் காலை வரை உணவு உண்ணாமல் விரதம் இருப்பார்கள்.

சிவராத்திரி வகைகள் :

நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகைப்படும். மகா சிவராத்திரியன்று சிவ பெருமானுக்கு ஆறு கால பூஜைகள் முதல் நாள் துவங்கி, மறுநாள் வரை நடைபெறும்.

2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி எப்போது ?

2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18 ம் தேதி, மாசி 06ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் சிவ பெருமானுக்கு உரிய பிரதோஷமும் கூட. மகா சிவராத்திரியுடன் கூடிய சனி மகா பிரதோஷம் என்பதால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி அதீத சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அன்றைய தினம் பெருமாளுக்கு உரிய திருவோணம் விரதமும் சேர்ந்து வருகிறது.

சிவ வழிபாட்டிற்குரிய நேரம் :

சதுர்த்தசி திதியே சிவராத்திரி காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 18 ம் தேதி அன்று மாலை 06.24 மணி துவங்கி, பிப்ரவரி 19 ம் தேதி மாலை 04.03 வரை உள்ளது. அதற்கு பிறகு அமாவாசை திதி துவங்குகிறது. பிப்ரவரி 18 ம் தேதி மகா சனிப்பிரதோஷம் என்பதால் பகல் 3 மணிக்கே சிவ வழிபாட்டை துவங்கி விடலாம்.

விரதம் துவங்க வேண்டிய நேரம் :

பிப்ரவரி 18 ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகே சதுர்தசி திதி துவங்குவதால் அன்று பகல் பொழுதில் இருந்து விரதத்தை துவங்கி, பிப்ரவரி 19 ம் தேதி மாலை சிவ பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். இரவு கண் விழிக்காமல், ஒரு நாள் மட்டும் விரதம் இருக்க நினைப்பவர்கள் பிப்ரவரி 19 ம் தேதி காலை விரதத்தை துவங்கி, பகல் 3 மணிக்கு விரதத்தை நிறைவு செய்யலாம்.

என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?

மகா சிவராத்திரியில் படிக்க வேண்டிய சிவ மந்திரங்கள் மற்றும் சிவன் பாடல்கள்

இரவு முழுவதும் கண் விழித்து சிவ புராணம் படிக்கலாம். சிவனுக்குரிய பாடல்கள், மந்திரங்கள் தெரிந்தால் பாராயணம் செய்து சிவனை வழிபடலாம். முடியாதவர்கள் அமைதியான இடத்தில் அமர்ந்து ஓம் நம சிவாய மந்திரத்தை தொடர்ந்து ஜபித்துக் கொண்டே இருக்கலாம்.